அதிமுக தலைமையை விமர்சித்தால் பொது இடத்தில் தாக்குவதா? சசிகலாவிடம் அடிவாங்கிய திருச்சி சிவா கேள்வி
சென்னை: டெல்லி விமான நிலையத்தில் அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா தம்மை சரமாரியாக தாக்கிய விவகாரத்தில் அமைதியாக இருக்குமாறு திமுக தலைவர் கருணாநிதி தமக்கு அறிவுறுத்தியுள்ளதாக அக்கட்சி எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார். மேலும் அதிமுக அரசை விமர்சித்தால் பொது இடத்தில் தாக்குகிற புதிய கலாசாரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் திருச்சி சிவா சாடியுள்ளார்.
அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவும் திமுக எம்.பி. திருச்சி சிவாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அண்மையில் வெளிவந்தன. இதனை திருச்சி சிவா தரப்பு மறுத்தது.
அதே நேரத்தில் அந்த படங்களில் மார்பிங் செய்யப்பட்டவையும் உள்ளன; ஒரிஜினலும் உண்டு எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமையன்று டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பாவும் மோதிக் கொண்டனர்.
சசிகலா- திருச்சி சிவா அடிதடி
சென்னை திரும்ப காத்திருந்த திருச்சி சிவாவை திடீரென சசிகலா புஷ்பா சரமாரியாகத் தாக்கியிருந்தார். பதிலுக்கு சசிகலாவை திருச்சி சிவாவும் அடித்திருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெ.விடம் சசிகலா விளக்கம்
இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்ட அசிங்கத்தை ஊடகங்களிலும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். இந்த நிலையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா புஷ்பா சந்திக்க போயஸ் கார்டன் சென்றார். பிற்பகல் 2 மணிக்கு சென்ற அவர் மாலை 5.15 வரை போயஸ் கார்டனில் சசிகலா புஷ்பா இருந்தார். அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விளக்கம் அளித்ததாகவும் ஆனால் சசிகலாவை ஜெயலலிதா கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
கருணாநிதியுடன் சிவா சந்திப்பு
அதேபோல் திமுக தலைவர் கருணாநிதியை திருச்சி சிவா நேற்று சந்தித்து விளக்கம் அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, சசிகலா புஷ்பா என்னைத் தாக்கினார். ஆனால் நான் அவரைத் தாக்கவில்லை. ஆகையால் ஊடகங்கள் கைகலப்பு என போடுவது சரியல்ல.
புதிய கலாசாரமா?
அதிமுக தலைமையையும் அரசையும் நான் விமர்சித்ததால் தாக்கியதாக சசிகலா கூறுகிறார். ஒரு அரசை தலைமையை விமர்சித்தால் பொது இடத்தில் தாக்குவார்களா? அப்படியான ஒரு புதிய கலாசாரத்தை அதிமுக தொடங்கி வைக்கிறது என்றார்.