ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிராபிக் ராமசாமிக்கு காந்தியவாதி சசிபெருமாள் ஆதரவு
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவு அளிப்பதாக காந்தியவாதி சசிபெருமாள் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை திமுக, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து விட்டன. அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில் மதுவிலக்கு பொதுவேட்பாளராக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி போட்டியிடுகிறார். தன்னை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவித்து ஆதரவு அளிக்கக் கோரி திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார் டிராபிக் ராமசாமி. ஆனால், அக்கட்சிகள் எதுவும் டிராபிக் ராமசாமிக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், டிராபிக் ராமசாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக காந்தியவாதி சசிபெருமாள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது :-
மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த கடந்த மாதம் முழுவதும் நடைபாதை விழிப்புணர்வு பிரசாரப் பயணம் மேற்கொண்டோம். கடலூரில் கடந்த மே 30 அன்று மதுவிலக்கு கூட்டம் நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட மதுவிலக்கு ஆர்வலர்கள் பலரும் சேர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், மதுவிலக்கு பொது வேட்பாளராக டிராபிக் ராமசாமி போட்டியிடுவதற்கும், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்று வேட்பாளராக நான் போட்டியிட உள்ளேன்' என்றார்.

இது குறித்து டிராபிக் ராமசாமி கூறுகையில், ‘தமிழகத்தில் பல்வேறு குடும்பங்களில் மதுவால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரைக் காண முடிகிறது. ஆகவே தமழிக அரசின் மதுவிலக்கு கொள்கைக்கு எதிராக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளேன்' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications