சென்னை ஏர்போர்ட்டில் அமெரிக்க வாலிபரிடம் இருந்து சாட்டிலைட் போன் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மும்பை செல்லும் விமானத்தில் பயணிக்கவிருந்த அமெரிக்க வாலிபர் வைத்திருந்த சாட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானம் ஞாயிற்றுக்கிழமை கிளம்ப தயாரானது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்பவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.
அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் என்ற வாலிபரை சோதனை செய்கையில் சாட்டிலைட் போன் சிக்கியது. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, தான் அமெரிக்காவில் சாட்டிலைட் போனை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து அதிகாரிகள் டேவிட்டின் போனை பறிமுதல் செய்தனர். டேவிட்டுக்கு குற்றப் பின்னணி ஏதாவது உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சாட்டிலைட் போன் மூலம் அவர் யார், யாரை எல்லாம் தொடர்பு கொண்டார் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.