டாஸ்மாக் கடைகளுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுக் கடைகளை மூட வலியுறுத்தி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடைபெற்றது.
லஞ்சம், ஊழல் மற்றும் மதுவை ஒழிப்பதற்காக பாடுப்பட்டு வரும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
சென்னையில் போராட்டம்
இதன் ஒரு கட்டமாக டாஸ்மாக் கடைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும் பங்கேற்றனர்.
மதுரையில் அஞ்சலி
மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அண்ணா பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணா துரை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மதுக்கடைகளை மூடுக
டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும். முதல் கட்டமாக அதன் வேலை நேரத்தை 12-ல் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும்.
வாரத்தில் 2 நாள் விடுமுறை
குற்றச்செயல்களை உருவாக்கும் மதுக்கூடங்களை (பார்) உடனடியாக மூட வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களாக எழுப்பப்பட்டன.
இளம் பெண்கள் தற்கொலை
கடலூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுவால் கணவரை இழந்துள்ளனர். மதுவுக்கு அடிமையான கணவரின் கொடுமையால் பல பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மதுவினால் சீரழிவு
மதுரையில் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி மேஜையை விற்று மது குடித்துள்ளனர். அந்தவகையில், மதுக்கடைகள் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள சீரழிவுகள் இனியும் தொடரக் கூடாது என்பதற்காக இந்தப் போராட்டம் நடைபெறுவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
மதுக்கடைகளுக்கு அஞ்சலி
இந்த போராட்டத்தை முன்னிட்டு டாஸ்மாக் என எழுதப்பட்ட போர்டுக்கு மாலை அணிவித்து இருந்தனர் போராட்டக்குழுவினர். தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடைபெற்றது.