மேம்பாலம் கட்டினால் விபத்து நடக்காது!' - நிதின் கட்கரியை மிரள வைத்த சத்யபாமா
மேம்பாலம் கட்டினால் விபத்து நடக்காது என்று கூறி நிதின் கட்கரியை திருப்பூர் எம்பி சத்யபாமா மிரள வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் தொகுதி அ.தி.மு.க எம்.பி சத்தியபாமா, தொகுதி பிரச்னை தொடர்பாக மத்திய அமைச்சர்களை அடிக்கடி சந்தித்துப் பேசி வருகிறார். ' சேலம்-கோவை என்.எச் 47ல் குறிப்பிட்ட இடங்களில் மேம்பாலம் அமைக்கப்படாததால்தான் விபத்து ஏற்படுகிறது. விபத்தைத் தடுக்க மேம்பாலம் கட்டிக் கொடுங்கள்' எனக் கோரிக்கை மனுவை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் மனு கொடுத்திருக்கிறார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனாக இருந்தாலும் பியூஸ் கோயலாக இருந்தாலும், தொகுதிப் பிரச்னைக்காகச் சந்திப்பதற்கு சத்தியபாமா தயக்கம் காட்டுவதில்லை. நேற்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தவர், கோரிக்கை மனு ஒன்றை அளித்திருக்கிறார்.
மேம்பாலங்கள் அமைக்காமல்
அந்த மனுவில், ' சேலம் - முதல் செங்கப்பள்ளி வரையிலான சுமார் 103 கி.மீட்டர் தொலைவில் 4 வழி மற்றும் 8 வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தனை தூர இடைவெளி உள்ள சாலையில் மேம்பாலங்கள் அமைக்கப்படாமல் இருப்பதால் அதிகப்படியான வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
விபத்து பகுதிகள்
இதனால் மக்கள் அதிகப்படியான சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தினமும் வாகன விபத்து அரங்கேறி வருகிறது. அதிலும் குறிப்பாக, 1)பெருந்துறை-கஞ்சிக்கோவில்-கவுநாதபாடி, அதே போல் 2)பெருந்துறை-துடுபதி- மாக்கினாம்கோம்பை 3)கொளத்துப்பாளையம்-விஜயமங்கலம், இதேபோல் 4)பெருந்துறை-பெத்தம்பாளையம்- கஞ்சிகோவில்ஆகிய சாலை வழிப்பகுதிகள் அனைத்தும் தினமும் வாகன விபத்துப் பகுதிகளாகவே விளங்கி வருகிறது.
வாகன பாதை
இதற்கு முக்கிய காரணம் மேம்பாலம் அமைக்கப்படாததுதான் ஆகும். இதைத்தவிர மிகவும் முக்கியப் பிரச்சனையாக விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதி இருக்கிறது . ஏனெனில் இரு பக்கங்களிலும் சுங்கச்சாவடி செயல்பட்டு வருவதால் அதன் குறுக்கே பொதுமக்கள் கடந்து செல்வதற்கான வாகன பாதை எதுவும் அமைக்கபடாமல் அதன் கட்டமைப்பு உள்ளது.
பொதுமக்கள் நலன்
அதனால் இரு சக்கரம் மற்றும் அத்தியாவசிய வாகனங்கள் செல்வதைக் கருத்தில் கொண்டுவிஜயமங்கலம் பகுதி சுங்கச்சாவடியின் குறுக்கே பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுரங்கப்பாதை அமைத்து விரைவில் செயல்படுத்திடவேண்டும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.