சசிகலா சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த சொத்துக்குவிப்பு சீராய்வு மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 வருட சிறை தண்டனையை எதிர்த்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பு கடந்த மே 3ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இதை பரிசீலணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் மே 10ஆம் தேதி வழக்கு எண் ஒதுக்கியது.
சீராய்வு மனு
சீராய்வு மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே, மூல வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பினாகி சந்திரகோஷ் கடந்த மே மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். மற்றொரு நீதிபதியான அமிதவராய் தலைமையிலான அமர்வு சீராய்வு மனுவை விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இம்மனு விசாரணைக்கு வராமல் தாமதமானது.
அமிதவ ராய், ரோஹின்டன் நரிமன்
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி நீதிபதிகள் அமிதவ ராய், ரோஹின்டன் நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ரோஹிண்டன் நாரிமனின் தந்தை பாலி நாரிமன் (காவிரி வழக்கில் கர்நாடகாவிற்காக ஆஜராகிறார்) ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா-சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்புக்காக ஆஜரானவர்.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இதனால் ரோஹிண்டன் நாரிமன், இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். எனவே விசாரணை தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போனது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனு மீது ஆகஸ்ட் 22ஆம் தேதி இன்று பிற்பகலில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
அணிகள் இணைப்பு
அமிதவராய் கோஷ் மற்றும் போப்டே ஆகிய நீதிபதிகள் அமர்வு இதை விசாரிக்க உள்ளது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் சொத்துக்குவிப்பு சீராய்வு வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.