ஜெ. விடுதலையை எதிர்த்த டிராபிக் ராமசாமி அப்பீல்மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி, கடந்த மே 11-ந் தேதி 4 பேரையும் விடுவித்தார்.

இதை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு ஜெயலலிதா தரப்பு பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த ஜூன் மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்பில் அடிப்படை கணித பிழைகள் உட்பட பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எனவே ஜெயலலிதாவை விடுவித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்''என கோரப்பட்டு இருந்தது.
இந்நிலையில் டிராபிக் ராமசாமியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் டிராபிக் ராமசாமி, அவரது வழக்கறிஞர் ராஜாராம் நேரில் ஆஜராகி இருந்தனர். அப்போது தலைமை நீதிபதி தத்து, ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் முதல் முன்னுரிமை இருக்கிறது. இதையடுத்து முதல் புகார்தாரர் என்ற முறையில் சுப்பிரமணியன் சுவாமிக்கும் வழக்கு விசாரணையில் பங்கேற்றவர் என்ற முறையில் அன்பழகனுக்கும் மூன்றாம் தரப்பாக செயல்பட உரிமை இருக்கிறது.
இந்த வழக்கில் உங்களுக்கு உரிமை இல்லை. எனவே உங்களது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications