வகுப்பறையில் மயங்கி விழுந்த 5ம் வகுப்பு மாணவன் மரணம்- போலீசார் விசாரணை
நாமக்கல்: நாமக்கல்லில் பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த 5-ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் எஸ்.பி. புதூரில் அரசு நிதி உதவி பெறும் அர்த்தனாரி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகன் (வயது 10). வழக்கம் போல, நேற்று காலை பள்ளி சென்ற மோகன், வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை எழுதிக் கொண்டிருந்துள்ளான்.
அப்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளான் மோகன். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்கள் இதனை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக மோகனை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் பள்ளி ஆசிரியர்கள். அங்கு மாணவனை பரிசோதித்த ஆசிரியர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மோகனின் மயக்கம் குறித்து நாமக்கல் அருகே எம்.ராசாம்பாளையத்தில் வசித்து வரும் அவனது பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த மோகனின் பெற்றோர், மகனின் இறப்புச் செய்தி கேட்டுக் கதறி அழுதனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நாமக்கல் போலீசார், 10 வயது மாணவனின் திடீர் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.