இந்த ஆண்டில் இனி ஆசிரியர் இடமாற்றம் கிடையாது: பள்ளிக் கல்வித்துறை
சென்னை: மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டில் இனி ஆசிரியர் இடமாற்றம் கிடையாது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அரையாண்டு தேர்வு வந்துவிட்டதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டு வரை இனிமேல் ஆசிரியர்கள் மாறுதல் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அரசாணை, பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும், தொடக்க கல்வி இயக்குனரகத்திற்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாணை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பப்பட உள்ளது.
3000 ஆசிரியர்கள் இடமாற்றத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மாற்றம் செய்யப்பட்டார். புது இயக்குநர் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் இனி ஆசிரியர்கள் இடமாற்றம் இருக்காது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications