”குடிமகன்கள் கவனத்திற்கு”- போதையில் தகராறு செய்த தந்தையை வெட்டிய மகன் கைது
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் குடித்துவிட்டு வந்து தகராறு செய்த தந்தையை மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் போலீஸ் சரகத்துக்குட்பட்டது மூலக்கரைப்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் முனியசாமி. இவர் ஒரு விவசாயி.
இவருக்கு நாகேஸ்வரி, மல்லேஸ்வரி என 2 மனைவிகள். அக்கா, தங்கைகளான இவர்களில் நாகேஸ்வரி இறந்து விட்டார். இவருக்கு 4 குழந்தைகளும், மல்லேஸ்வரிக்கு ஒரு குழந்தையும் உள்ளனர்.
மது அருந்தும் பழக்கம் கொண்ட முனியசாமி தினசரி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று இரவும் அவர், மது அருந்தி வந்து மனைவி மல்லேஸ்வரியிடம் தகராறு செய்தார். இதனை 9ம் வகுப்பு மாணவரான மகன் தம்பிதுரை தட்டிக்கேட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த தம்பிதுரை, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, தந்தையை வெட்டினார். படுகாயம் அடைந்த முனியசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கமுதி போலீஸ் உதவி ஆய்வாளர் உத்தரவின்பேரில் போலீஸார் விரைந்து சென்று முனியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து தம்பிதுரையும் கைது செய்யப்பட்டார்.