கொளுத்தும் வெயில்... புதுவையில் பள்ளி கோடை விடுமுறை நீட்டிப்பு!
புதுவை: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுவையில் பள்ளிகளின் கோடை விடுமுறை நீட்டிக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் பள்ளிக்கூடங்களுக்கு தற்போது கோடைவிடுமுறை விடப்படுள்ளது. மீண்டும் பள்ளிகள் வரும் ஜூன் 3ம் தேதி திறக்கப் படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் பல மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. பகலில் வெளியில் தலை காட்ட இயலாத அளவிற்கும் வெயில் அடிக்கிறது. இதன் காரணமாக பள்ளிகளின் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து புதுவையில் பள்ளிகளின் கோடை விடுமுறை நீட்டிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக புதுவை கல்வி அமைச்சர் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு சென்று கல்வி பயில்வதில் இன்னல் ஏற்படும் என அரசு கருதுவதால் மாணவர்களின் நலன்கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 12-ந்தேதியன்று திறக்கப்படும்.
மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை உரிய காலத்தில் நடத்திட வேண்டியுள்ளதால் பள்ளிகள் சிறப்புப்பாட வகுப்புகள் நடத்துவதற்கு தடை ஏதும் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புதுவையைப் போலவே தமிழகத்திலும் வெயில் அதிகமாகவே உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி தமிழகத்திலும் பள்ளிகளின் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.