பள்ளி வேன் கவிழ்ந்து மாணவர்கள் காயம்: குடிகார டிரைவர் கைது
நெல்லை: நெல்லை அருகே வேன் டிரைவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 11 பேர் படுகாயமடைந்தனர்.
நெல்லையை அடுத்துள்ள தாழையூத்தில் உள்ளது ஒரு தனியார் பள்ளி. இங்கு சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாலை பள்ளி முடிந்து கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பள்ளி வேனை பாலடை பகுதியை சேர்ந்த டிரைவர் மாரியப்பன் ஓட்டினார். கங்கைகொண்டான் சிப்காட் அருகே செல்லும்போது வேன் நிலைதடுமாற தொடங்கியதால் வேனில் இருந்த மாணவ, மாணவிகள் அலற தொடங்கினர்.
நிலை தடுமாறி சென்ற வேன் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த ஆலடிபட்டியை சேர்ந்த 11 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வேனில் இருந்த மாணவர்களின் பெற்றோர் வேன் டிரைவர் போதையில் இருந்ததாகவும், அதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து கங்கைகொண்டான் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து டிஎஸ்பி நடராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். போதையில் இருந்ததாக கூறப்பட்ட வேன் டிரைவர் மாரியப்பன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications