சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நாளை பள்ளிகள் திறப்பு
சென்னை: தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கான பணிகள் நடந்து வருகின்ற நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில் கடந்த மாதம் நவம்பர் 10 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வந்தது.
இதற்காக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்திருந்தன.

தீபாவளி விடுமுறை:
12 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அன்றைய தினம் பெய்த கனமழையால் இந்த 3 மாவட்டங்களிலும் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை தொடர்ந்ததால், ஒவ்வொரு நாளாக விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இப்படியே 25 ஆம் தேதி வரை விடுமுறை தொடர்ந்தது. அதாவது, தீபாவளி பண்டிகை முதல் கார்த்திகை தீபம் வரை 18 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

பள்ளி கல்லூரிகள் திறப்பு:
நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த மாதம் 26 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டன. அன்றைய தினமும், 27, 28 ஆம் தேதிகளிலும் பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் நடந்தன.

வெள்ளத்தில் மூழ்கின:
ஆனால், மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியதால் 29 ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வந்தது. இம்மாதம் 1 ஆம் நள்ளிரவு முதல் மறுநாள் நள்ளிரவு வரை கொட்டித்தீர்த்த வரலாறு காணாத தொடர் மழையால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரிகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

மீள முடியாத நிலை:
இந்த அசாதாரண சூழ்நிலையில், பள்ளி - கல்லூரிகளின் விடுமுறை மேலும் நீட்டிக்கப்பட்டது. 3, 4 ஆம் தேதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, மழை குறைந்தாலும், வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் மீள முடியாத நிலை நீடித்தது.

கொசு மருந்து பிரயோகம்:
கல்வி நிறுவன வளாகங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் அகற்றப்பட்டதுடன், வகுப்பறைகளும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு தொற்றுநோய் பாதிக்காத வகையில், பள்ளி - கல்லூரி வளாகத்தில் பிளீச்சிங் பவுடர்கள் தூவப்பட்டுள்ளன. கொசு மருந்தும் அடிக்கப்பட்டு வருகிறது.

நாளை முதல் பள்ளி:
கடும் சோதனைகளுக்கு பிறகு நாளை பள்ளி வரும் மாணவர்கள் நிறைய எதிர்பார்ப்புடன் வருகின்றனர். அதாவது, மழை வெள்ளத்தில் நிறைய மாணவர்களின் புத்தகங்கள், சீருடைகள் அடித்து செல்லப்பட்டுவிட்டன.அதனால், வெள்ள பாதிப்பு அதிகம் இருந்த இடங்களில் உள்ள பள்ளிகளில் சீருடை கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும், 2 ஆம் பருவத்திற்கான புத்தகங்களையும் அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளியில் மருத்துவ முகாம்:
இந்நிலையில் பல நாட்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வெள்ள பாதிப்புகளால் தொற்று நோய் காரணிகளைத் தடுக்கப் பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications