தொடர் மழை - கடலூர், திருவண்ணாமலை, நாகை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: கன மழை நீடித்து வருவதால் இன்றும் பல மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமாக உள்ளது. அதிக அளவிலான மழைப் பொழிவை தாங்க முடியாமல் தமிழகமே தள்ளாடிக் கொண்டுள்ளது.
இந்தநிலையில் சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று பிற்பகல் முதல் விடாமல் விடிய விடிய பலத்த மழை பெய்து நகரத்தையே நாசமாக்கி விட்டது. சென்னைப் புறநகர்ப் பகுதிகள் பலவும் வெள்ளக்காடாகியுள்ளன.
இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரி்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல நாகப்பட்டனம் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
அதேபோல கடலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் கலெக்டர் சுரேஷ் குமார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சித் தலைவர் ஞானசேகரன் விடுமுறை அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.