விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை.. ஏப். 25ல் ஸ்கூல் திறந்திருக்கும்.. செங்கோட்டையன் கறார்
விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு: விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின் போது பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் ஏப்ரல் 25-ந் தேதி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
லாரிகள் ஓடாது
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. மேலும் மணல் லாரிகளும் ஓடாது என மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் எந்த லாரிகளும் 25ம் தேதி ஓடாது.
சினிமா கிடையாது
அதே போன்று சினிமா காட்சிகளும் ஏப்ரல் 25ம் தேதியன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக அன்றைய ஒரு நாள் மட்டும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது.
கடைகள் இருக்காது
முழுஅடைப்பிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்ரமராஜா அறிவித்தார். இதே போன்று சென்னை கோயம்பேடு வியாபாரிகள் சங்கமும் முழு அடைப்பிற்கு அதரவு தெரிவித்துள்ளது.
ஸ்கூல் இருக்கும்
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பில் அரசு பங்கேற்காது என்று ஈரோட்டில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், அன்று அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.