"முதல்வர்" கனவு... நள்ளிரவில் ரகசிய யாகம் நடத்திய விஜயகாந்த்- பிரேமலதா?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படியும் முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றியே தீர்வது என்ற நோக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் ரகசிய யாகம் ஒன்று நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பது தான் கடந்த மாதம் வரை மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. ஆனால், முதலில் தனித்துப் போட்டி, கூட்டணி இல்லை என அறிவித்த விஜயகாந்த், சில தினங்களிலேயே மக்கள் நலக் கூட்டணியுடன் கை கோர்த்தார்.
அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பிரச்சாரம் செய்து வருகிறார். எப்படியும் முதல்வர் பதவியை பிடித்தே ஆவது என்ற வேட்கை அவரது பேச்சில் புலப்படுகிறது.
ரகசிய யாகம்...
இதற்கிடையே, பேயையும், நோயையையும் பார் என்ற பழமொழிக்கேற்ப, மக்களிடம் பிரச்சாரம் ஒருபுறம் சூடுபறக்க நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் ரகசிய யாகம் ஒன்றும் நடத்தப் பட்டுள்ளதாம்.
வேத விற்பன்னர்கள்...
இதற்கென தஞ்சையில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வேத விற்பன்னர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனராம். வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட அவர்கள், நள்ளிரவில் விஜயகாந்த் வீட்டிற்கு வந்து யாகம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
விஜயகாந்த் பங்கேற்பு...
வீட்டின் கதவுகளை அடைத்து விட்டு, யாகம் நடத்திய போதும், விசயம் எப்படியோ வெளியில் கசிந்து விட்டது. இந்தப் பூஜையில் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் பங்கேற்றதாகத் தெரிகிறது.
நாற்காலி ராசி...
அதோடு, விஜயகாந்தின் ஜாதகப்படி அவருக்கு ஒன்பதரை ஆண்டுகள் மட்டுமே நாற்காலி ராசி இருப்பதாக அவரது ஆஸ்தான ஜோதிடர் கூறியுள்ளாராம். அதன்படி, ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாகவும், நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக எதிர்க்கட்சி தலைவராகவும் விஜயகாந்த் இருந்துள்ளார்.
கட்சி நலன்...
எனவே, அடுத்ததாக முதல்வர் நாற்காலியில் விஜயகாந்த் அல்லது பிரேமலதாவை அமர வைக்கும் நோக்கத்தில் இந்த யாகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தியால் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதனால், கட்சி நலன் கருதியும் இந்த யாகம் நடத்தப்பட்டதாம்.
பிரசாதம்...
இந்த யாகத்தில் வைக்கப்பட்ட குங்குமம், விபூதி போன்றவை கட்சி அலுவலகத்திற்கு வந்த மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு கோவில் பிரசாதம் என்ற பெயரில் வழங்கப்பட்டதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.