கர்நாடகாவை கண்டித்து இன்று சென்னையில் 'காவிரி உரிமை மீட்பு பேரணி'.. சீமான்
சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காவிரி உரிமை மீட்பு பேரணி நடத்தப்படுகிறது எனவும் இந்த பேரணியில் ஒவ்வொரு தமிழரும் ஒன்றாகக் கூடுவோம் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி நதிநீர் உரிமையானது கன்னடர்களுக்கு மட்டுமானது என்ற உளவியலை சித்தரித்த அரசியல் சக்திகள், மாநிலம் முழுவதும் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் போராட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது அதன் உச்சகட்டமாகத் தமிழகப் பேருந்துகளைச் சிறைப்பிடித்தல், தமிழக வாகனங்களைத் தாக்குதல், தமிழர்களைத் தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் இந்திய பேரரசு அமைதிகாத்து, தமிழர் மீதான தாக்குதலை அவச்சொற்களை அனுமதிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்நாட்டின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும், 'தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது என உச்ச நீதிமன்றத்தில் கூறும் படி கர்நாடக அரசுக்கு ஆலோசனை வழங்கினேன்' என இந்திய பெருநாட்டின் நடுவண் அமைச்சர் அனந்தகுமார் வெளிப்படையாகக் கூறும் அளவுக்குக் நிலை இருக்கிறது. ஒரு நடுவண் அமைச்சர், காவிரி நதிநீர் சிக்கலை முன்வைத்து வெளியிட்ட இக்கருத்து நடுவண் அரச மரபுகளுக்கு எதிரானது.
அந்தந்த மாநிலங்களின் வளங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே என்றால், தமிழகத்தின் நெய்வேலி மின்சாரமும் யாருக்குச் சொந்தம்? பகுத்துண்டு வாழ்வதுத்தானே வாழ்கை? இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எப்படிக் கர்நாடகவுக்குக் கொடுக்கப்படுகிறது? நெய்வேலி நிலக்கரி எப்படி நாட்டுடைமையானது? நதிகளின் நீர்பங்கீட்டில் தமிழகத்தைச் சுற்றியுள்ள எல்லா மாநிலங்களும் வஞ்சகம் செய்கிறதே ஏன்?
போதுமான நீர்வள மேலாண்மையும், நீர்வளத்தில் தன்னிறைவு அடைவதற்கான திட்டங்களும் இல்லாததன் விளைவை இன்று தமிழர்களைத் திராவிடர்களாய் திரித்து ஏமாற்றிப் பெற்ற அரசியல் அதிகாரம் பயனற்று கிடப்பதை உணர்கிறோம். தமிழ்த்தேசிய அரசியலே இந்த மண்ணிற்குத் தேவை என்பதை உரக்க உரைக்கிறது. தமிழர்களைத் தொடர்ச்சியாக மாற்றாந்தாய் மனப்போக்குடன் பார்க்கும் மத்திய அரசின் அணுகுமுறையும், தமிழர்களின் பெருந்தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு வஞ்சிக்கும் அண்டை மாநிலங்களின் அடாவடி நயவஞ்சகப் போக்கும் கண்டிக்கத்தக்கது..
எனவே இன்று நடக்கும் "காவிரி உரிமை மீட்பு பேரணியில்-ஆர்ப்பாட்டத்தில் இன உணர்வும் மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழரும் ஒன்றாகக் கூடுவோம்''என்று கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications