இன்று பிரபாகரன் 60-வது பிறந்த நாள்- பொது கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க சீமான் கோரிக்கை!
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 60வது பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் இன்று பொதுக்கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செய்யவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத் தளபதி பிரபாகரனின் பிறந்த நாளை பொது நிகழ்ச்சியாக கொண்டாடவும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுமதி கோரப்பட்டதில் பல இடங்களில் காவல் துறை அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.
இது இந்திய அரசமைப்பு அளித்துள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். இந்திய அரசமைப்பு எமக்கு உறுதியளித்துள்ள கருத்துச் சுதந்திரத்தை தமிழக அரசு காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டு, கூட்டங்களுக்கு அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
அகதிகள் முகாம்களில் தடை
இதனிடையே அகதிகள் முகாம்களில் பிரபாகரன் பிறந்த நாள், நாளைய தமிழீழ மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் எதனையும் நடத்தக் கூடாது என்று காவல்துறை தடை விதித்துள்ளது. காவல்துறையின் இந்த கெடுபிடிகளுக்கு அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.