நான் முதல்வரானால்... ஆடு, மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவேன்: சீமான்
சென்னை: தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றால், ஆடு, மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவது உள்ளிட்ட சில மாற்றங்களைச் செய்வேன் எனத் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இது தொடர்பாக ஆனந்தவிகடனுக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழகத்தின் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தால், என்னென்ன மாற்றங்கள் முன்னெடுக்கப் படும் என அவர் விலாவாரியாக தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-
தமிழன் முதல்வராகணும்...
ஏன், தமிழ்நாட்ல பொறந்தவன் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகக் கூடாதா? 2015, மே 18 அன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தறோம். அப்புறம் தேர்தல் தான்.
வெற்றிப் பேச்சு...
இப்போ நாங்க பேசுறது எல்லாம் வெட்டிப் பேச்சுனு உங்களுக்குத் தோணலாம். ஆனால், இதெல்லாம் வெற்றிப் பேச்சுனுஅப்புறமா தான் புரியும்.
தேசிய தொழில்...
வயிறு, உயிரு, அறிவு... இதுக்குத் தான் எங்க முக்கியத்துவம். விவசாயத்தை தேசிய தொழிலா அறிவிப்போம்.
தேசியப் பயிர்கள்...
கம்பு, சாமை, தினை, கேழ்வரகு போன்ற பயிர்களை தேசியப் பயிர்களா அறிவிப்போம். அவற்றைப் பயிரிடுபவர்களுக்கு காப்பீட்டுத் திட்டங்களைக் கொடுப்போம்.
ஆடு மேய்ப்பது அரசுப்பணி...
ஆடு, மாடு மேய்க்கிறதை அரசுப் பணி ஆக்குவோம். படிக்காத பிள்ளையை ஆடு, மாடு மேய்க்கத் தான் லாயக்குனு சொல்றாங்க.
ஊக்குவிப்புத் திட்டம்...
அப்படிச் சொல்ற அந்த ஆசிரியர் பெருமக்களே அரைக் கிலோ கறி வாங்க, கறிக்கடை வரிசையில நிக்குறாங்க. அந்தக் கறியை யார் உங்களுக்குக் கொண்டு வந்து தர்றாங்க. ஆடு, மாடு மேய்க்கிறவன் தானே. அவனை ஊக்குவிக்கத் தான் இந்தத் திட்டம்.
அரசு பள்ளிக் கல்வி...
ஆங்கிலம் ஓர் அறிவு இல்லைனு என் மக்களுக்குப் புரிய வைக்கணும். சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் அரசாங்க வேலை பார்க்கிறவங்க வரை எல்லாருடைய குழந்தைகளையும் அரசாங்கப் பள்ளியில் கட்டாயம் படிக்க வைக்கணும்னு சட்டம் போடுவோம்.
பனை திட்டம்...
அப்புறம் முக்கியமா பனைத் திட்டம்னு ஒண்ணு வச்சிருக்கோம். பனை தான் தமிழகத்தின் மரம்னு இங்கே எத்தனை பேருக்குத் தெரியும்? நுங்கையும், இளநீரையும் தேசிய பானமா அறிவிக்கச் சொல்வோம்.
எங்க ஊர் பானம்...
கோக், பெப்சியை தெருவில் போட்டு விற்கணும். நுங்கு, இளநீரை உயர்ந்த உணவகங்களில் விற்கணும். உலகத்தின் எந்தப் பெரிய பிரபலம் தமிழகத்துக்கு வந்தாலும் இளநீரை வெட்டிக் கொடுத்து, ‘குடிச்சுப் பாருங்க. இது தான் எங்க ஊர் பானம்'னு சொல்வோம்.
இருகரம் நீட்டி வரவேற்கிறேன்...
இதெல்லாம் சுருக்கமா நான் சொல்றேன். ஆனா, இப்படிப் பல கோடிக் கனவுகள் இருக்கு. அதைக் கூடி நிறைவேற்ற ஓடி வாருங்கள்னு தான் இருகரம் நீட்டி எல்லாரையும் அழைக்கிறோம்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.