ஐ.நா.வில் ராஜபக்சே பேச எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நாம் தமிழர் போராட்டம்
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
ஐ.நா. சபையில் ராஜபக்சே பேசுவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தினமும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியதாவது:
ஐ.நா. மாமன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பேசுவதற்கு அனுமதி அளித்தது ஈழ தமிழர்களுக்கு செய்துள்ள பெருந்துரோகம் ஆகும்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு கடைபிடித்த அதே கொள்கைகளையே மத்தியில் உள்ள பா.ஜனதா அரசும் கடை பிடிக்கிறது. வெளியுறவு கொள்கையில் உடனடியாக மாற்றங்களை செய்ய வேண்டும்.
இலங்கையில் தனி ஈழம் உருவாக ஈழ தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளிடமும் தமிழக அரசே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இவ்வாறு சீமான் பேசினார்.