பாஜகவுக்கு எதிராக பேசிவிட்டதாலேயே திமுகவை நம்பிவிட முடியாது- சீமான்
அருப்புக்கோட்டை: பாஜகவுக்கு எதிராக ஸ்டாலின் பேசினாலும் திமுகவை நம்பிவிட முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார்.
திமுக தலைவராக ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இந்தியா முழுவதும் காவி நிறம் அடிக்க முயற்சிக்கும் மோடியின் முயற்சியை முறியடிக்க வேண்டும்.
மதவெறியால் மத்திய அரசு மக்களாட்சி மாண்பை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது என்று பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்காததாலேயே ஸ்டாலின் இப்படி பேசியுள்ளார் என்ற கருத்து நிலவுகிறது.

இந்திய குடிமகன்
இதுகுறித்து அருப்புக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அவமானகரமானதாகும்.

மேடை பேச்சாளர்
சிதம்பரனார் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பாரத ரத்னா வேண்டும் என வலியுறுத்தாதது வேதனை அளிக்கிறது. இந்தியா முழுவதும் காவிமயமாக்கும் மோடியின் முயற்சியை முறியடிப்போம் என்று ஸ்டாலின் ஏதோ மேடை பேச்சாளர் போல் பேசியுள்ளார்.

கடைபிடிக்கவில்லை
கடந்த காலங்களில் இவர்கள் கூறும் காவி கட்சிகளில் கட்சி கூட்டணி வைத்திருந்ததை மறந்து விட்டார்களா. சாதாரண பாஜகவை வெளியே கொண்டு வந்தது திமுகதான். மதவாதத்துக்கு எதிராக பேசுவதை தொடக்க நிலையில் இருந்து இவர்கள் கடைபிடிக்கவில்லை.

திமுகவை நம்புவது கடினம்
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலின்போது பாஜகவிடம் ஆதரவு கேட்டதை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. இன்னும் 3 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது. பாஜகவுக்கு எதிராக ஸ்டாலின் கருத்து கூறியிருந்தாலும் திமுகவை நம்புவது கடினம்.

கையேந்த மாட்டோம்
சென்னைக்கு அமித்ஷா வருகை தொடர்பான சர்ச்சையை தவிர்க்கவே இப்படி ஸ்டாலின் பேசியுள்ளார். அதே வேளையில் பாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல என்று துரைமுருகன் கூறியுள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டும். 2 சீட்டுக்காக யாரிடமும் கையேந்த மாட்டோம் என்றார் சீமான்.












Click it and Unblock the Notifications