ஸ்டெர்லைட் குடியிருப்புக்கு பெரியவர் வியனரசுவால் எப்படி தீ வைக்க முடியும்? சீமான் சீற்றம்
நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி வியனரசு கைது சீமானை சீற்றமடைய வைத்துள்ளது.
Recommended Video

சென்னை: தூத்துக்குடி போராட்டத்தில் ஸ்டெர்லைட் குடியிருப்புக்கு தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு மீது கைது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. ' இந்த வயதில் அவரால் இப்படியான காரியங்களைச் செய்ய இயலுமா என்று ஒரு கணம் யோசித்திருந்தால்கூட,அவரைக் கைது செய்து சிறையிலடைக்க மனம் வந்திருக்காது' எனக் கொதிப்பைக் காட்டியிருக்கிறார் சீமான்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனைத் தொடர்ந்து, தமிழர் அமைப்புகளின் நிர்வாகிகள் மீது கைது நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ம.தி.மு.க நிர்வாகிகள் தாக்கப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கிடைத்தாலும், எதாவது ஒரு வழக்கில் தன்னை நெருங்குவார்கள் என்பதால் அமைதியாக இருக்கிறார் சீமான்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற அமைதிப் பேரணியின்போது, கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தைக் கூறி சிலரைக் கைது செய்துள்ளது காவல்துறை.
அதில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசுவும் ஒருவர். இதுகுறித்து ஆதரவாளர்களிடம் பேசிய சீமான், தூத்துக்குடி போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்தார் என்ற அப்பட்டமான பொய் வழக்கை ஐயா வியனராசு மேல் ஏவியிருக்கிறார்கள்.
அமைதிப் பேரணியில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள், அவரது முகநூல் பக்கத்திலேயே இருக்கிறது.
அந்தக் கூட்டத்தில் அவர் எங்கோ தொலைவில் இருக்கிறார். இந்த வயதில் அவரால் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய முடியுமா என காவலர்கள் யோசித்திருக்கவில்லை. அப்படி யோசித்திருந்தால், அவரைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கு யாருக்கும் மனது வந்திருக்காது.
ஐ.பி.எல் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டது போராடியது, ஆனால் நாம் தமிழர் கட்சியினரை மட்டும் தேடித் தேடி இரவில் அறுபதுக்கும் மேற்பட்டோரை கைது செய்தார்கள்.
கதிராமங்கலத்தில் நடந்த 100 நாள் போராட்டத்தில் 26 கட்சிகளின் அமைப்புகள் பங்கேற்றன. அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்களைக்கூட கைது செய்யவில்லை, நம்முடைய தம்பிகளைக் கைது செய்தார்கள். இப்போது ஐயா வியனரசுவைக் கைது செய்திருக்கிறார்கள். எப்படியாவது நம்மை, இந்த மக்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிவிட வேண்டும் எனத் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். நாங்கள் இந்த மக்களுக்கானவர்கள் என்பதை வழக்குகள் மூலமாக உறுதிசெய்கிறார்கள்' எனக் கொதிப்பைக் காட்டியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications