தமிழர்களுக்கு தேவை அரசியல் விடுதலை.. நன்னிலத்தில் சீமான் பேச்சு!
இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழர்களுக்குத் தேவையான ஒன்றாக இருப்பது அரசியல் விடுதலை மட்டுமே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நன்னிலம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், " காலத்தின் கட்டாயமாக இருப்பது நாம் தமிழர் கட்சி, தமிழர்களுக்கு தேவை அரசியல் விடுதலை " என்று பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், " தமிழர்கள் மற்ற இனத்தவர் போல உலகில் வாழவேண்டும் என்றால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவேண்டும். அப்போதுதான் தமிழர்கள் விடுதலை பெற்றவர்களாக தாய் நாட்டில் வாழமுடியும்.
தமிழகத்தின் ஆட்சியில் அமர்ந்த கட்சிகள் எல்லாம் நமது இயற்கை வளத்தை கொள்ளையடிப்போருக்கு வழங்கிவிட்டன. நாட்டின் 32 ஆறுகளையும் விற்று தின்றுவிட்டார்கள். இப்போதுள்ள குடிநீர் பஞ்சத்துக்கு காரணம் யார்? வறட்சிக்கு காரணம் யார்? ஆட்சியாளர்கள் மட்டுமே.
காவு கொடுக்கப்பட்ட கச்சத்தீவு
கச்சத்தீவு காவு கொடுக்கப்பட்டது, தமிழகத்தில் அணு உலை வந்தது எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் தெரியாமல் நடந்ததா? இல்லையே. மீத்தேன் ஹைட் ரோகார்பன் எடுப்பதும் அப்படித்தான். மத்திய அரசு தமிழர்களின் வாழ்வாதாரத்தினை சுரண்டுகிறது.
போராடும் மக்களை அடக்கும் அரசு
எதிர்க்கவேண்டிய மாநில அரசு, போராடும் மக்களை அடக்குகிறது. நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் இவர்களுக்குத் தெரியாமல் குழாய் பதித்தார்களா? அதே போல நீட் தேர்வு. கொண்டு வந்தது யாரு? காங்கிரஸ். செயல்படுத்தியது யாரு? பாஜக.
நிகழ்கால தேவை
தமிழின மக்களுக்கு கடந்த கால காயம் இல்லை. எதிர்கால கனவும் இல்லை. வெறும் நிகழ்கால தேவை மட்டும்தான் உள்ளது. அதனால்தான் ஓட்டுக்கு விலை போகிறார்கள். இந்த நிலை மாறிட வேண்டும்." என்றார் சீமான்.
பெருந்திரள் கூட்டம்
இந்தக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.