கருணாநிதி, ஜெயலலிதா எதிர்ப்பு வாக்குகளை சிதறாமல் கைப்பற்ற சீமான் புது வியூகம்!
சென்னை: தேர்தல் பிரசாரத்தில் பாமகவையும், தேமுதிகவையும் விமர்சனம் செய்யப்போவதில்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முடிவு செய்துள்ளதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விட்டு, நிர்வாகிகளுடன் சீமான் கலந்து ஆலோசித்ததாக தெரிகிறது.
அப்போது, விஜயகாந்தையும் ராமதாஸையும் விமர்சித்துப் பேசுவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்' என நிர்வாகிகளிடம் கூறியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கவன சிதறல்
இதற்கு சில காரணங்களை சீமான் கூறியதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமான காரணம், மக்களின் கவனத்தை சிதற விட வேண்டாம் என்பதுதானாம்.

நாமே மாற்று
இந்தத் தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் மாற்றாக நாம் தமிழர் போட்டியிடுகிறது என்ற தோற்றம்தான் வாக்காளர்கள் மத்தியில் வர வேண்டுமே தவிர 3வது இடத்திற்காக, நான்காவது இடத்திற்காக போட்டி போடுகிறது என்ற தோற்றம் வரக்கூடாது.

கூட்டணி வைத்தவர்கள்
விஜயகாந்த் மற்றும் ராமதாஸ் இருவரும் அதிமுகவோடு கூட்டணி வைத்தவர்கள்தான். எனவே இவர்கள் இப்போது மாற்று என்று கூறுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். எனவே நாம் தமிழர்தான் அந்த இடத்தை பூர்த்தி செய்ய முடியும்.

பாஜகவும் அப்படியே
பாஜகவும் மாற்றாக உருவாக விரும்பவில்லை என்றே தெரிகிறது. இரு திராவிட கட்சிகளில் ஒன்றின் முதுகில் பயணிக்கவே அக்கட்சி விரும்புகிறது. எனவேதான் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் பெயர்களை கூட சொல்லாமல் மோடி தமிழக ஆட்சி முறையை விமர்சனம் செய்து பிரசாரம் செய்துள்ளார்.

சிதறாது
எனவே, நம்முடைய எதிரி கருணாநிதி, ஜெயலலிதா மட்டும்தான் என்ற எண்ணம்தான் மக்களிடம் வர வேண்டும். இவர்களை வலுவாக எதிர்ப்பதன் மூலம் புதிய வாக்காளர்கள் நம் பக்கம் அணி திரள்வார்கள். தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள்கூட இல்லை என்பதால், அதுவரையில் என்னுடைய பிரசாரம் ஜெயலலிதா, கருணாநிதிக்கு எதிராகத்தான் இருக்கும் என்றாராம் சீமான்.












Click it and Unblock the Notifications