பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்திய போது தமிழக மீனவர் சுட்டு கொல்லப்படவே இல்லையா? சர்ச்சையில் சீமான்!
காரைக்குடி: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்திய காலத்தில் தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இலங்கையில் இனப்பிரச்சனை வெடித்து, ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலம் முதலே தமிழ்நாட்டு மீனவர்களை ஈழத் தமிழ்ப் போராளிகள் என சந்தேகித்து காக்கை குருவி போல சுட்டுக் கொன்று வருகிறது இலங்கை ராணுவம்; இதை ஏன் சீமான் மடைமாற்றிப் பேச வேண்டும் என கொந்தளிக்கின்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.
தமிழ்நாட்டு மீனவர்களை அண்மையில் கைது செய்த இலங்கை கடற்படை வவுனியா சிறையில் அடைத்தது. இந்த மீனவர்களை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பும் போது மொட்டை அடித்து அனுப்பிய கொடூரத்தை நிகழ்த்தி இருக்கிறது இலங்கை. இந்த அட்டூழியத்துக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் கொந்தளித்து போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.

இது தொடர்பாக காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சீமான் அளித்த பதில்: தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டது இந்திய அரசுக்குதான் அவமானம். வல்லாதிக்க நாடு என்கிற இந்தியாவை மதிக்காமல் இலங்கை நடந்து கொள்கிறது. இதையே மலையாளிக்கோ, கன்னடனுக்கோ குஜராத்திக்கோ இலங்கை அரசு செய்திருந்தால் கொதித்திருக்கமாட்டார்களா? கேட்பதற்கு நாதி இல்லாதவன் என்பதாலேயே தமிழனுக்கு இத்தகைய கொடூரம் நிகழ்த்தப்படுகிறது.
நான் தமிழ்நாட்டு முதல்வராக இருக்கும் போது என் மீனவன் மீது கை வைத்துவிடுவார்களா? அப்படி கை வைத்துவிட்டால் நான் உடனே பதவி விலகிவிடுவேன். பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்திய போது ஒரு தமிழக மீனவனாவது சுட்டுக் கொல்லப்பட்டானா? இல்லையே.. தமிழ்நாட்டு குடிகளையும் காப்பாற்றிய காவல்தெய்வம் பிரபாகரன். அவரது பிள்ளைகள் நாங்கள் என்றார்.
சீமானின் இந்த பேச்சு இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில், 1974-ல் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது; அதன் பின்னர் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க, வலைகளை உலர்த்த, அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் 1983-ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் வெடித்து ஈழத் தமிழர்கள் அகதிகளாக பல்லாயிரக்கணக்கில் தமிழ்நாட்டில் தஞ்சமடையத் தொடங்கினர். ஈழத் தமிழ் மக்களுடன் இலங்கை போராளி குழுக்களும் தமிழ்நாட்டுக்கு அகதிகளைப் போல வந்து சென்றனர். இதனால் நடுக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்களையும் சந்தேகித்து காக்கை குருவி போல சுட்டுப் படுகொலை செய்தது சிங்கள கடற்படை. இலங்கையில் பிரபாகரன் தலைமையில் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதிகளில்தான் 800-க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனை சீமானும் பல முறை பேசியிருக்கிறார். 850 மீனவர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசு மீது ஏன் வழக்கு தொடரவில்லை என சீமானே கேள்வி எழுப்பி இருக்கிறார். 2009-ம் ஆண்டு பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
அப்படியானால் 15 ஆண்டுகளில்தான் 850 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனரா? 1980களில் இருந்தே இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்துதான் தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்யும் கொலைபாதகமும் அரங்கேறியது. சீமான் இப்போது ஏன் இப்படி பேசுகிறார் என்பது புரியவில்லை. அத்துடன் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அதாவது 2010-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு தேவாலய திருவிழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்ல முடிகிறது என்பதையும் சீமான் நினைவில் கொள்ள வேண்டும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications