தமிழகத்தை உலுக்கும் ஊழல் முறைகேடுகள்.. மையமாகிப் போன திண்டுக்கல்!
சேகர் ரெட்டியின் கூட்டாளி திண்டுக்கல் ரத்னமும் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாஜி கலெக்டர் நாகராஜனும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிக்கியுள்ளார்.
சென்னை: தமிழகத்தை உலுக்கும் ஊழல் முறைகேடுகளில் 'திண்டுக்கல்' மையமாக 'உருவெடுத்திருப்பது' பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி... இந்த பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் கூட்டாளிகள் புதுக்கோட்டை ராமச்சந்திரனும், திண்டுக்கல் ரத்னமும் அடிபட்டனர்...

திண்டுக்கல் ரத்னம்
இப்போது சேகர் ரெட்டியுடன் இணைந்தே புழல் சிறைவாசத்தை அனுபவிக்கின்றனர் புதுக்கோட்டை ராமச்சந்திரனும் திண்டுக்கல் ரத்னமும்.. சேகர் ரெட்டியின் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் துணையாக இருந்தவர் திண்டுக்கல் ரத்னமும், புதுக்கோட்டை ராமச்சந்திரனும்.

மூவரணி
தமிழகத்தின் மணல் வியாபாரத்தை இந்த மூவரணிதான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கியமான அரசு உதவி பெறும் கல்லூரியான ஜி.டி.என் கலை கல்லூரியையே விலைக்கு வாங்கும் அளவுக்கு சக்திமிக்கவரானார் ரத்னம். திமுக, அதிமுகவின் மாஜி அமைச்சர்களின் கருப்பை வெள்ளையாக்கும் பணியை கச்சிதமாக செய்தவர் திண்டுக்கல் ரத்னம் என்ற பேச்சும் உண்டு. இத்தனைக்கும் அரசு சர்வேயராக வாழ்க்கையை தொடங்கியவர்தான் இந்த ரத்னம்.

நாகராஜன்
இதேபோல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்து 'அம்மா' புகழ்பாடி பெயர்பெற்ற நாகராஜன் ஐஏஎஸ் அதிகாரியும் இப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிக்கியுள்ளார். நாகராஜன் வீட்டில் இருந்து ரூ1.5 கோடி பணம் மற்றும் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த காலத்தில் அப்போதைய அமைச்சர் ஒருவரின் உறவினரின் வலதுகரமாக திகழ்ந்தவர் என்ற 'சிறப்புக்குரிய'வராக இருந்தார் நாகராஜன்...

மாஜி அமைச்சர்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே பந்தாடப்பட்டவர்... அவரது சொத்துகளில் பெரும்பகுதியை போயஸ் கார்டன் பறித்தது... அவர் அரசியலைவிட்டே ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் புத்துயிர் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications