வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக வந்த வாலிபர் திடீர் மரணம்... உடல் தோண்டி எடுப்பு
செங்கோட்டை: செங்கோட்டை அருகே மரணமடைந்து உடல் அடக்கம் செய்யப்பட்ட வாலிபரின் உடலை போலீஸார் தோண்டி எடுத்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
செங்கோட்டை அருகேயுள்ளது பண்பொழி. இங்குள்ள மேட்டுத்தெரு பகுதியை சார்ந்தவர் நாகூர்கனி, ஜீனத் பேகம் தம்பதியினரின் மூத்த மகன் காதர் முகைதீன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். 20 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து 2 மாத விடுமுறையில் வந்துள்ளார்.
இவருக்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால் ஏற்கனவே இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி இவரை விட்டு பிரிந்துள்ளார். இதன் காரணமாக இவர் 2 ஆவது திருமணம் செய்துக் கொள்ள பெற்றோரிடம் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக வீட்டில் சண்டையாக இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி திடீரென காதர் முகைதீன் இறந்து விட்டார். உடனே அவரது பெற்றோர், தங்களது மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக ஜமாஅத் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இறந்த காதர் முகைதீன் உடலை, பண்பொழி ஷேக் முகம்மது ஜும் ஆ பள்ளிவாசல் வளாகத்தில் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் காதர் முகைதீன் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறைக்கும், வருவாய் துறைக்கும் புகார்கள் சென்றன. இதனைத்தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து விசாரணையில் இறங்கினர். மேலும் அடக்கம் செய்த காதர் முகைதீன் உடலை மீண்டும் எடுத்து பிரேத பரிசோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் செல்வகுமார் தலைமையில் செங்கோட்டை தாசில்தார் சங்கரலிங்கம் முன்னிலையில் ஊர் பிரமுகர்கள் பார்வையில் காதர் முகைதீன் உடலை மீண்டும் எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து தாசில்தார் சங்கரலிங்கம் கூறும் போது உடற் கூறு பரிசோதனை அறிக்கைக்குப் பின்தான் கொலையா, தற்கொலையா என்பது குறித்து முழுமையான தகவல்கள் தெரிய வரும் என்றார்.