'புத்திசாலி' விஜயகாந்த்துக்குக் 'கனி' கொடுத்த ஜெ.. செந்தில் பேச்சு!
கரூர்: விஜயகாந்த்தைப் போய் புத்திசாலி என்று நினைத்து முதல்வர் ஜெயலலிதா ஒரு கனியைக் கொடுத்தார். ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை அவருக்கு என்று நடிகர் செந்தில் பேசியுள்ளார்.
கரூரில் அதிமுக வேட்பாளர் தம்பித்துரைக்கு ஆதரவு திரட்ட நடிகர் செந்தில் வந்து பேசினார். பிரசாரத்திற்கு முன்பாக செய்தியாளர்களையும் சந்தித்தார் செந்தில். அப்போது அவர் கூறுகையில்,
கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய 3 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து உள்ளேன். இந்த 3 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது.
முதல்வர் வழங்கி உள்ள திட்டங்கள் பற்றி மக்களுக்கு புரியும்படி எடுத்து சொல்லி வருகிறேன். இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
மத்திய அரசின் பிடி நம் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். மத்திய அரசு தமிழ் நாட்டிற்கு எதை கேட்டாலும் 'நஹி' என்று சொல்கிறார்கள். 'நஹி' என்ற வார்த்தையை மாற்ற வேண்டும்.
நாங்கள் சூரியனை எடுக்க சொன்னோமா, மாம்பழம், முரசு ஆகியவற்றை எடுக்க சொன்னோமா. இலைக்கு மட்டும் அவர்களுக்கு என்ன வந்தது. தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு கண்டிப்பாக ஓட்டு கிடையாது.
விஜயகாந்த் புத்திசாலி என்று, முதல்வர் அவருக்கு ஒரு கனி கொடுத்தார். அதை ஒழுங்காக பயன்படுத்திகொள்ள அவருக்கு தெரியவில்லை. ஆண்டவன்- மக்கள் புண்ணியத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றார் செந்தில்.