தருமபுரி மாவட்ட திமுக பொறுப்பாளராகிறாரா செந்தில்குமார் எம்.பி..?
தருமபுரி: திமுகவில் மாவட்டம் தோறும் அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வரும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர்களை அதிகளவில் மாவட்ட பொறுப்பாளர்களாக கொண்டு வரும் திட்டத்தில் இருக்கிறார்.
ஏற்கனவே திருச்சி, நாமக்கல் போன்ற மாவட்டங்களுக்கு இளைஞர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்திற்கும் புதிய முகம் ஒருவரை மாவட்ட பொறுப்பாளராக திமுக தலைமை நியமிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இப்போது மாவட்டச் செயலாளராக உள்ள தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. சொல்லிக்கொள்ளும் வகையில் பெரிதாக செயல்படவில்லை என்றும், அதிமுக முகாமுடன் சுமூக உறவு பேணுவதாகவும் கட்சித் தலைமைக்கு புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
மேலும், முல்லை வேந்தன் திமுகவில் இருந்து கடந்த 2014-ல் நீக்கப்பட்டதால் வேறு வழியின்றி தடங்கம் சுப்பிரமணியன் தற்காலிக மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் எப்படியோ ஒரு வழியாக மாவட்டச் செயலாளராக மாறி தனது பதவியை அவர் தக்க வைத்துக்கொண்டார். இதனிடையே தருமபுரி மக்களவை உறுப்பினராக உள்ள செந்தில்குமார் எம்.பி. மக்கள் பணிகளில் தீயாக வேலை செய்து வருகிறார். இவரை பற்றி தலைமைக்கும் எந்த புகாரும் இதுவரை சென்றதில்லை.
மத்திய அமைச்சரின் சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள்... முதல்வர் அறிவிப்பு காணல் நீரா..? -வைகோ
செந்தில்குமார் எம்.பி. மீது உள்ள ஒரே குறை என்னவென்றால், எதற்கெடுத்தாலும் முன்கோபம் பட்டுவிடுகிறார், இதனால் அரசு அதிகாரிகள் திமுக கோரிக்கைகளை கிடப்பில் போட்டுவிடுகிறார்கள் என்பது மட்டும் தான். மற்றபடி மனிதர் நேர்மையானவர். அதிகாரிகளிடம் மட்டும் இவர் கொஞ்சம் கோபத்தை குறைத்துக்கொண்டு, நெளிவு சுளிவு தெரிந்து பக்குவமாக எடுத்துக்கூறி காரியத்தை சாதிக்க தெரிந்தால் செந்தில்குமாரை மிஞ்ச மாவட்டத்தில் ஆளே இல்லை என்கின்றனர் தருமபுரி மாவட்ட உ.பி.க்கள்.
இதனிடையே பாமகவின் கோட்டையாக கருதப்படும் தருமபுரியில் அந்தக் கட்சியை எதிர்த்து சமரசமின்றி அரசியல் செய்ய தகுதியான நபர் செந்தில்குமார் எம்.பி. என்பதால் அவருக்கு விரைவில் மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைக்கக்கூடும் எனத் தெரிகிறது.