டாஸ்மாக்கில் சின்டெக்ஸ் டேங்க்.. மதுப்பிரியர்களுக்கு தனி நம்பர் பிளேட்.. வேட்பாளரின் நூதன கோரிக்கை
ஸ்ரீபெரும்புதூர்: டாஸ்மாக்கில் சின்டெக்ஸ் டேங்க் வைக்க வேண்டும். மதுப்பிரியர்களுக்கு தனி நம்பர் பிளேட் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு நூதன கோரிக்கையுடன் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில செயலாளர் லோக்சபா தேர்தலில் களமிறங்கி உள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது.

இந்த தேர்தலில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க நிர்வாகிகள் போட்டியிடுகின்றனர். இந்த சங்கத்தின் மாநில மாநில செயலாளர் எம்எஸ் ஆறுமுகம் இன்று ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த சமயத்தில் எம்எஸ் ஆறுமுகம் கழுத்தில் தாலி கயிறு அணிந்து வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனுத்தாக்கலுக்கு பின் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் கோரிக்கைகளை பட்டியலிட்டார். இதுதொடர்பாக எம் எஸ் ஆறுமுகம் கூறியதாவது:
நான் முதல் முதலாக ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளேன். சங்க தலைவர் செல்லப்பாண்டியனுடன் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளேன். எங்களை பொறுத்தமட்டில் நாட்டில் இளம் விதைவகளை கணக்கிட்டு அசு வேலை வழங்க வேண்டும். இந்தியா முழுவதும் கடல்நீரில் தான் மதுபானம் தயாரிக்க வேண்டும்.
மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரூ.10, 20க்கு தண்ணீர் விற்பனை செய்கின்றனர். இதனை மாற்ற வேண்டும். மதுப்பிரியர்கள் பாதிக்கப்படாத வகையில் செலவை குறைக்கும் நோக்கத்தில் டாஸ்மாக்கில் சின்டெக்ஸ் டேங்க்கில் குடிநீர் வைக்க வேண்டும். மேலும் அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
மதுப்பிரியர்களுக்கு தனியாக நம்பர் பிளேட் வேண்டும். நாங்கள் டாஸ்மாக்கில் செக்காக வழங்காமல் பணமாக வழங்கிறோம். அரசுக்கு ரூ.36 ஆயிரம் கோடி ஆண்டு முழுவதும் கொடுக்கிறோம். அனைத்து சரக்கு பாட்டிலுக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும். வரும் தேர்தல் என்பது பக்தி கூட்டணி பாஜக, பகுத்தறிவு கூட்டணி திராவிட கட்சிகள் மற்றும் எங்களின் பார் கூட்டணிக்கு இடையே தான் போட்டியாக இருக்கும். இதனால் எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்'' என்றார்.
இந்த வேளையில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன் அளித்த பேட்டியில், ‛‛மதுபானம் குடிப்போரின் வாகனங்களுக்கு தனி கலர் வழங்க வேண்டும். இதனால் மதுப்பிரியர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடியும். நாங்கள் புதச்சேரி உள்பட 40 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம். இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தலாக அமையும்'' என்றார்.












Click it and Unblock the Notifications