புதுவை மின்துறை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி திடீர் ஆய்வு- 'லேட்' ஊழியர்களுக்கு கடும் வார்னிங்
புதுச்சேரி: மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியின் முதல்வராக நாராயணசாமி பொறுப்பேற்ற பின்னர் அரசின் பல்வேறு துறைகளுக்கு திடீரென சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி வணரப்பேட்டையில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கமலகண்ணன் ஆகியோர் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

இதன் பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இன்று காலை 8.45 மணியளவில் மின்துறை அலுவலகத்திற்கு வந்தபோது 50 சதவீதத்திற்கும் மேலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. 9.15 ஆன பின்னும் பலர் பணிக்கு வரவில்லை. எனவே இது குறித்து அதிகாரிகள் கண்காணித்து, பணிக்கு உரிய நேரத்தில் வராத ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளேன். பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளேன்.
குருமாம்பேட், மேட்டுப்பாளையம், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் துணை மின்நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். மத்திய அரசு மின்துறைக்கு பல திட்டங்களை வைத்துள்ளது. அந்த திட்டங்கள் மூலம் நிதி பெற்று மின்துறையை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக மத்திய மின்துறை அமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.
முழுமையான மின்சாரம் வழங்கினால் புதிய தொழில்கள் தொடங்கப்படும் என தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உபரியாக உள்ள மின்சாரத்தை தொழிற்சாலைகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளேன். மின்துறையை லாபத்தில் இயங்கச் செய்வதற்காக திட்டங்களை ஏற்படுத்தும்படி கூறியுள்ளேன்.
மின் கசிவை 2 மாதத்திற்குள் சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன். 24 மணிநேரமும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications