வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் செல்லூர் ராஜுவை காலிக் குடங்களுடன் விரட்டியடித்த மக்கள்
மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் செல்லூர் ராஜுவை மக்கள் காலிக் குடங்களுடன் விரட்டியடித்தனர்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு வரும் சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அவர் மதுரை மேற்கு தொகுதயில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு 7.15 மணிக்கு அவர் வாக்கு சேகரிக்க சோலை அழகுபுரம் பகுதிக்கு சென்றார். முன்னதாக அவர் பிரச்சாரத்திற்கு வருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. சோலை அழகுபுரத்திற்கு வந்த செல்லூர் ராஜுவை பார்த்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அவரை சூழ்ந்து கொண்டனர்.

குடிநீர் உள்பட எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை என்று அவர்கள் கோஷமிட்டனர். கடந்த தேர்தலின்போது வாக்கு கேட்டு வந்ததோடு சரி அடுத்து தற்போது மீண்டும் வாக்கு சேகரிக்க வந்துள்ளீர்களா? தொகுதிப் பக்கமே எட்டிப்பார்க்காமல், எதுவும் செய்யாமல் வாக்கு சேகரிக்க வந்துவிட்டீர்களா என்று கூறி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அதிமுகவினருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்தும் மக்கள் செல்லூர் ராஜுவை வாக்கு சேகரிக்கவிடவில்லை. இதையடுத்து அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் இருந்தபோது அவர் விடுதலையாக வேண்டி ஆயிரக்கணக்கானோரை திரட்டி பால்குடம் எடுத்து மதுரையையே திரும்பிப் பார்க்க வைத்தவர் செல்லூர் ராஜு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications