சசிகலா மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றுக- மைத்ரேயன் எம்.பி
கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் மீது பதிவான வழக்குகளை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்.பி மைத்ரேயன் கூறியுள்ளார்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு மாற்றப்பட்டு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று ஓபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.பி மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார். கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் மீது பதிவான வழக்குகளை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரதம் நடந்துவருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் மைத்ரேயன் எம்பி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தை துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், கூவத்தூர் ரிசார்ட்டில் தன்னை அடைத்துவைத்ததாக மதுரை மேற்குத் தொகுதி எம்எல்ஏ சரவணன் கொடுத்த புகாரின் பேரில், எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் மீது கூவத்தூர் காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நேர்மையான அதிகாரிகள் விசாரணை நடத்தினால் உண்மை வெளியாகிவிடும் என்ற அச்சம் சசிகலாவிற்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்பட்டுள்ளது. எனவேதான் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளார்.
கூவத்தூர் ரிசார்ட்டில் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் எஸ்.பி. முத்தரசி, வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் மாற்றப்பட்டு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மைத்ரேயன் குற்றம் சாட்டினார்.
சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மைத்ரேயன் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications