செம்மரம் கடத்தியதாக கைதான தமிழர்கள் மீது ஆந்திர போலீஸ் கொடூர தாக்குதல்.. ஷாக் வீடியோ!
சென்னை: செம்மரம் கடத்தியதாக, ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட 180 தமிழர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளதாக டிவி சேனல் ஒன்றில் வீடியோ வெளியாகியுள்ளது.
ஆந்திர வனப்பகுதியில் சுமார் 180 பேரை செம்மர கடத்தலுக்கு எதிரான ஆந்திர போலீஸ் படை இன்று கைது செய்தது. இவர்கள் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இவர்களை ஒரு மினி லாரியில் ஆடு, மாடுகளை அடைப்பதை போல அடைத்து வைத்து ஓரிடத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். மூச்சுவிட கூடிய இடமில்லாத அளவுக்கான லாரியில் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
மேலும், அவர்களை அடைத்து வைத்தபோது, சட்டையை அவிழ்க்க போலீசார் உத்தரவிட்டனர். செல்போன்களை பறித்தனர். பெல்ட், லத்தியால் அவர்களை அடித்து துவைக்கிறார்கள் போலீசார். இந்த காட்சிகள் தொலைக்காட்சி சேனலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், என்னதான் குற்றமே செய்திருந்தாலும்கூட கைதிகளை நடத்துவதற்கு ஒரு வரைமுறை வகுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். எனவே தமிழர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்றார்.