ஜல்லிக்கட்டுக்காக.. தமிழகம் முழுவதும் முழு அடைப்பு.. பெட்டிக் கடைகள் கூட பல ஊர்களில் மூடல்!
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது.
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியுள்ளது. 90 சதவீத ஊர்கள் முடங்கிப் போயுள்ளன. பல ஊர்களில் பெட்டிக் கடைகள் கூட திறக்கப்படவில்லை.
தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று இன்று காலை வேலைநிறுத்தம் தொடங்கியது.
அனைத்து ஊர்களிலும் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மளிகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளன. பஸ்கள் பெரும்பாலும் ஓடவில்லை. தனியார் பேருந்துகள் முழுமையாக ஓடவில்லை.
சரக்கு லாரிகள், மணல் லாரிகள் என எந்த லாரிகளும் ஓடவில்லை. மினி பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடவில்லை. பெரும்பாலான ஊர்களில் ஊரே வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆங்காங்கே அமைதியான முறையில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
சென்னையிலும் முழு அடைப்பு கிட்டத்தட்ட முழு அளவில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெட்டிக் கடைகள் கூட திறக்கப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
கோவை, திருப்பூர் ஆகிய தொழில் நகரங்களில் முழு அளவில் போராட்டம் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.