காணாமல் போன மகளைக் கண்டுபிடிக்க ரூ.5000 லஞ்சம் கேட்ட எஸ்.ஐ.. கண்ணீருடன் தந்தை புகார்
நாமக்கல்: நாமக்கல்லில் காணாமல்போன மகளை கண்டுபிடிக்குமாறு புகார் கொடுக்க வந்த பெற்றோரிடம் ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூரை அடுத்த, லத்துவாடி பஞ்சாயத்து நல்லையன்கவுண்டன்புதூர் காலனியை சேர்ந்தவர் இதயக்கனி. இவர் அருகிலுள்ள அணியாபுரத்தில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது 18 வயது மகள் 8 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார். கடந்த, 17 ஆம் தேதி இரவு வீட்டிலிருந்த இதயக்கனி மகள் திடீரென மாயமாகிவிட்டார். இதுகுறித்து மோகனூர் போலீசில் இதயக்கனி புகார் செய்தார்.
ஆனால், புகார் மனுவை பெற்றுக் கொண்ட, எஸ்.ஐ இராமதாஸ் இந்த வழக்கு பதிவு செய்வதற்கு 7,000 ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார். அதைத் தொடர்ந்து இதயக்கனியும் 5,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
ஆனால், மேலும் 2,000 ரூபாய் கொடுத்தால் தான் வழக்கு பதிவு செய்யப்படும் என கறாராக கூறியதாக எஸ்.ஐ இராமதாஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மோகனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
அதே நேரம் நேற்று முன்தினம் இரவு உதவி ஆய்வாளர் இராமதாஸ் மோகனூரில் இருந்து நாமக்கல் காவல்நிலையத்துக்கு பணியிட மற்றம் செய்யப்பட்டார். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications