கத்தியால் குத்திய கஞ்சா வியாபாரி.. நெஞ்சில் விழுந்த 3 கோடு.. விடாமல் கட்டிப் புரண்ட எஸ்.ஐ!
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கஞ்சா வியாபாரி ஒருவரை மடக்கிப் பிடிக்க முயன்ற சப் இன்ஸ்பெக்டரை, கஞ்சா வியாபாரி கத்தியால் குத்தினார். இருந்தும் விடாமல் அந்த சப் இன்ஸ்பெகட்ர் அந்த கஞ்சா வியாபாரியுடன் சண்டை போட்டார். பின்னர் பொதுமக்களும் சேர்ந்து அந்த கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்தனர்.
அருப்புக்கோட்டையில் நடந்த இந்த மோதல் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் எஸ்.ஐ. யாக இருப்பவர் வீராசாமி. இவர் ஆத்திப்பட்டி பகுதியில் தனது பைக்கில் வந்து கொண்டிருந்தபோது இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மீது சந்தேகம் வந்து நிறுத்தி விசாரித்தார்.
அப்போது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். தொடர்ந்து அவரிடம் சோதனை போட்டபோது கஞ்சா பொட்டலங்கள் இருப்பதும், அவர் கஞ்சா விற்பவர் என்றும் தெரிய வந்தது. இந்த நிலையில் அந்த கஞ்சா வியாபாரி கத்தியை எடுத்து வீராசாமியை குத்தப் பாய்ந்தார். இதில் வீராசாமியின்மார்பில் கத்தி பட்டு 3 கோடு விழுந்தது. இருப்பினும் விடாமல் வீராசாமி அவருடன் மோதினார். இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
இதைப் பார்த்து அப்பகுதியில் இருந்த மக்கள் திரண்டு வந்து கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்தனர். பின்னர் வீராசாமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கஞ்சா வியாபாரியை போலீஸார் பிடித்துச் சென்றனர்.