காவிரி மேலாண்மை வாரியம்... உச்ச நீதிமன்ற உத்தரவே தப்பு! - சொல்கிறார் சித்தராமய்யா
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை நடந்த கர்நாடக சட்டப்பேரவையின் அவசரக் கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா பேசியது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என்று மத்திய அரசு திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது எங்கள் கவனத்திற்கும் வந்துள்ளது.

ஆனால் செப்.30-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், காவிரி மேலாண்மை வாரியம் ஒப்புதல் தெரிவித்திருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை நினைத்தபடி நினைத்த நேரத்தில் அமைத்துவிட முடியாது. வாரியத்தை அமைக்க சில பல சட்ட திட்டங்களைப் பின்பற்ற வேண்டியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது என்று அன்றைக்கே கூறியிருந்தேன்.
இதை தற்போது உணர்ந்துள்ள மத்திய, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைந்த பிறகுதான் அதற்கு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தமிழக, புதுச்சேரி அரசுகள் உறுப்பினர்களின் பெயர்களைப் பரிந்துரைத்துள்ளன. இது நடைமுறை சாத்தியமல்ல. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பிழையானதாகும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வந்ததில் இருந்தே கர்நாடகம் கூறிவருகிறது. இதற்குப் பதிலாக காவிரி மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது நிபுணர் குழு மட்டுமல்ல, அனைத்து அதிகாரமும் உள்ளது. இதை மத்திய அரசு தற்போது புரிந்து கொண்டுள்ளதாகக் கருதுகிறேன்.
காவிரி நதியில் இருந்து தினமும் 6 நாள்களுக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடுமாறும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறும் செப்.30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை (இன்று) வரவிருக்கிறது. இதில் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார் சித்தராமய்யா.












Click it and Unblock the Notifications