"சரக்கை உட்டுக்கோ சைடிஸை தொட்டுக்கோ.... திருச்சியை அதிரவைத்த கோவனின் பாடல்
திருச்சி: டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி பாடியதால் தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட ம.க.இ.க. பாடகர் கோவனின் புதிய பாடலாக களமிறக்கப்பட்டுள்ளது "சரக்கை உட்டுக்கோ சைடிஸை தொட்டுக்கோ...". திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மதுவிலக்கை வலியுறுத்தும் மாநாட்டில் பாடப்பட்ட இப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மூடு டாஸ்மாக்கை மூடு, ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்; ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸில உல்லாசம் போன்ற பல பாடல்களைப் பாடி டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கான பிரசாரம் செய்து வந்தவர் மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த பாடகர் கோவன்.
அவர் பாடிய பாடல்களில் முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சிப்பதாக கூறி திடீரென அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது தேசதுரோக வழக்கும் பாய்ந்தது. இதில் நீதிமன்றம் தலையிட்டு கோவன் ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில் ம.க.இ.க.வின் மற்றொரு அமைப்பான "மக்கள் அதிகாரம்" சார்பாக திருச்சி தென்னூரில் கடந்த 14-ந் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பாடகர் கோவன் பாடிய பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்த பாடல்:
சரக்கை உட்டுக்கோ சைடிஸை தொட்டுக்கோ..
குடி சிந்திக்காதே குடி...
ஆத்து மணல் கொள்ளையைக் கண்டுக்காமல் இருந்துக்கோ,
ஆவின் பாலில் சோப்பு நுரை
ஆயிரம் கோடி தியேட்டர் டீசர்ன்னு நினைச்சிக்கோ.
குடி சிந்திக்காதே குடி...
அரிசி விலை ஏறுதுன்னா அம்மா மெஸ்ல துன்னுக்கோ
வீட்டுக்குப் போனா பேஜாருன்னா டாஸ்மாக்ல தூங்கிக்கோ
குடி சிந்திக்காதே குடி..
இந்த பாடலை கோவன் பாடும்போது தென்னூர் உழவர் சந்தை மைதானமே அதிர்ந்தது.