4 குடும்ப நல நீதிமன்றங்கள்; 384 வழக்குகள்; இருப்பதோ ஒரே ஒரு நீதிபதி - இது சென்னை ஹைகோர்ட் நிலைமை!
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4 குடும்பநல நீதிமன்றங்களில் உள்ள 384 வழக்குகளும் ஒரே நீதிபதி முன்பு விசாரிக்கப்பட்டு வருகின்றது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 4 குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன. இதில் 2 நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.

முதலாவது மற்றும் இரண்டாவது கூடுதல் குடும்பநல நீதிமன்றங்களில் நீதிபதிகள் சாருஹாசினி, கலைமதி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் நீதிபதி இல்லாத 2 நீதிமன்றங்களின் வழக்குகளை சேர்த்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் குடும்ப சூழ்நிலையின் காரணமாக நீதிபதி கலைமதி திடீர் விடுப்பில் சென்று விட்டார்.
இதனால் நேற்று 4 குடும்பநல நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்த அனைத்து வழக்குகளையும், ஒரே நீதிபதியான சாருஹாசினி முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. 300க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒரே நீதிபதி ஒரே நாளில் விசாரிப்பது சாத்தியமற்றது என்பதால் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
2 ஆவது நாளான இன்றும் 4 நீதிமன்றங்களில் உள்ள 384 வழக்குகள் நீதிபதி சாருஹாசினி முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. 4 நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதால், அங்கு கூட்டம் குவிந்தது. வழக்கம்போல, பெரும்பாலான வழக்குகள் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இதனால் வழக்கிற்காக வரும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.











Click it and Unblock the Notifications