பாவம் பாஜக.. பரிதாப தமாகா... "மிச்ச சொச்சமும்... சொச்ச மிச்சமும்" கூட்டு வைக்கலாமே பேசாம!
சென்னை: சட்டசபைத் தேர்தல் தொடர்பாக பயங்கர எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர் தமாகா தலைவர்கள். ஆனால் ஒரேயடியாக அதிமுகவும், திமுகவும் பேசி வைத்தாற் போல ஒரே நாளில் கதவைச் சாத்தி விட்டுப் போய் விடடனர். தற்போது படுக்கப் பாய் கூட இல்லாமல் நடுத் தெருவுக்குத் தள்ளப்பட்டுள்ளது தமாகா.
இந்த நிலையில்தான் நமக்கு இன்னொரு பரிதாபத்துக்குரிய கட்சியின் நினைவு வருகிறது. அது பாஜக. இந்தக் கட்சியும் கூட யாரும் சீண்டாமல் தூக்கிப் போடப்பட்ட கட்சிதான். தேமுதிகவை நம்பினர், தெருவுக்கு வந்தனர். அதிமுகவை எதிர்பார்த்தனர், அல்வாதான் கிடைத்தது. திமுக பக்கமும் போக முடியாத நிலை. தங்களையும் நம்பி வந்த சரத்குமாரையும் இழந்த கொடுமைக்குரியவர்கள் பாஜகவினர்.
ஒரு ஆதரவற்றவருக்கு இன்னொரு ஆதரவற்றவர்தான் உதவி என்று சொல்வர்கள். அந்த வகையில் பார்த்தால் இப்போதைய சூழலில் தமாகவும், பாஜகவும் கூட்டணி வைத்தால்தான் செம பொருத்தமாக இருக்கும்.

எத்தனை நாள் காத்திருப்பு
ஜி.கே.வாசன் காங்கிரஸை விட்டு வெளியே வந்து தமாகாவை ஆரம்பித்ததிலிருந்தே அவரிடம், எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள் என்று தொடர்ந்து ஊடகங்கள் கேட்டு வந்தன.

வாசன் பதில்
எப்போதெல்லாம் செய்தியாளர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்களோ அப்போதெல்லாம், நாங்கள் ஜனநாயக ரீதியாக, உணர்வுப் பூர்வமாக, உளப் பூர்வமாக, உள்ளுக்குள் பேசி எங்களுக்குள் கலந்து பேசி, எது சரி, எது தவறு என்பதை ஆராய்ந்து, கூடிய விரைவில், வெகு விரைவில் நாங்கள் முடிவெடுத்து அதை முறைப்படி அறிவித்து தெரிவிப்போம்.. என்று யாருக்குமே புரியாத மாதிரியே பதில் சொல்லி வந்தார் வாசன்.

அழைத்த அதிமுக
உண்மையில் வாசன் கட்சிக்கு அதன் சக்திக்கும் மீறிய வகையில்தான் சீட் தர முன்வந்தது அதிமுக. 15 அல்லது 12 சீட் என்பதே மிகப் பெரிய விஷயம்தான். என்ன இரட்டை இலையில் நிற்கச் சொன்னார்கள். பேசாமல் அவர்கள் அதில் போட்டியிட்டிருக்கலாம்.

வாக்கு வங்கியே இல்லாத கட்சிக்கு எதுக்கு வீராப்பு
தமாகாவின் வாக்கு வங்கி நிரூபிக்கப்படாதது. அவர்களின் பலம் இன்னும் பரீட்சித்துப் பார்க்கப்படவில்லை. அவர்களுடைய உண்மையான வலு தெரியாது. இப்படி இருக்கையில் 12 அல்லது 15 சீட் என்பது கவுரமானதுதான். அதை புரிந்து கொள்ள தமாகா தவறி விட்டது.

புத்திசாலித்தனம் தேவை
இந்த இடத்தில்தான் புத்திசாலித்தனமாக யோசிக்கத் தவறி விட்டது தமாகா. இரட்டை இலையிலேயே கூட போட்டியிட்டு முதலில் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு கட்சியைப் பலப்படுத்திக் கொள்ள நல்லவாய்ப்பு கிடைத்தது. அதை வைத்து லோக்சபா தேர்தலிலும், அடுத்த சட்டசபைத் தேர்தலிலும் சற்று தெம்பாக பேச முயற்சி செய்திருக்கலாம்.

எடுத்த எடுப்பிலேயே
ஆனால் எடுத்த எடுப்பிலேயே 40 சீட் தேவை, 30 சீட் தேவை என்று அவர்கள் போனதுதான் சிக்கலாகி விட்டது. திமுகவிடமும் போக வழியில்லை ம.ந.கூ அல்லது வேறு கூட்டணிக்குப் போனால் விளங்காது என்ற நிலையில் அதிமுகவிடமே நைச்சியமாக பேசி ஏதாவதா சாதித்திருக்க முயற்சித்திருக்கலாம் தமாகா. அதைத் தவற விட்டு விட்டனர்.

பேசாமல் பாஜகவிடம் சேர வேண்டியதுதான்
தற்போது உள்ள நிலையில் தன்னைப் போலவே நிராதரவாக நிற்கும் பாஜகவிடம் போய் தமாகா கூட்டணி வைத்துக் கொள்ளலாம். இரண்டுமே சோக கீதம் பாடி வரும் கட்சிதான். இவர்கள் இருவரும் இணைந்து கை கோர்த்து கோரஸாக பிரசாரத்தில் குதித்தால் அதுவும் பார்க்க வித்தியாசமாகத்தான் இருக்கும்.
இந்த முடிவையாவது வாசன் சீக்கிரமே எடுப்பாரா.. !












Click it and Unblock the Notifications