காங்கிரஸுக்கு சிவகாமியும் கை கொடுக்கிறார்.. 40 தொகுதிகளிலும் பிரசாரம்!
சென்னை: கூட்டணியே இல்லாமல் குழம்பிப் போய் புலம்பிக் கொண்டிருந்த காங்கிரஸுக்கு ஒரு வழியாக கடைசி நேரத்தில் இரண்டு கைகள் கிடைத்து விட்டன.
நல்ல கையோ அல்லது அல்லக் கையோ ..ஏதாவது ஒரு கை இருந்தால்தான் எதிலுமே உற்சாகமாக, தெம்போடு ஈடுபட முடியும் எனபார்கள். ஆனால் நொள்ளக் கைக்குக் கூட வழியில்லாமல் போய்க் கிடந்த காங்கிரஸுக்கு தற்போது தொப்பி கார்த்திக் கை கொடுத்துள்ளார்.
அதேபோல தலித் தலைவரான சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி ஐஏஎஸ்ஸும் தற்போது உதவிக் கரம் நீட்டியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரும் கார்த்திக்கும் நேற்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து ஞானதேசிகனைச் சந்தித்து தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர். அப்போது சிவகாமிக்கு ஞானதேசிகன் பொன்னாடை போர்த்தி வரவேற்பும், நன்றியும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சிவகாமி பேசுகையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், அடித்தட்டு மக்களுக்கு வீடு உத்திரவாதம், அடிப்படை சுகாதாரத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றார்.
40 தொகுதிகளிலும், தானும் கார்த்திக்கும் பிரசாரம் செய்யப் போவதாகவும் சிவகாமி தெரிவித்தார்.