காஞ்சிபுரம் அருகே தூக்கத்தில் நடக்கும் சிறுமி கிணற்றில் விழுந்து பலி
காஞ்சிபுரம் அருகே தூக்கத்தில் நடக்கும் சிறுமி கிணற்றில் விழுந்து பலியானார்.
காஞ்சிபுரம்: தூக்கத்தில் நடக்கும் பழக்கமுள்ள சிறுமி கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
காஞ்சிபுரத்தில் உள்ள பிராமணர் தெருவைச் சேர்ந்தவர் ரம்யா(15). இவர் அண்மையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 456 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

ரம்யாவின் தந்தை பார்த்தசாரதி சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் தற்போது ரம்யா அவருடைய அக்கா சத்யாவின் வீட்டில் தங்கிப் படித்துவந்துள்ளார். ரம்யாவுக்கு மிகவும் அரிதான தூக்கத்தில் நடக்கிற நோய் இருந்துள்ளது.
இந்நிலையில், ரம்யா கடந்த ஜூன் 14 ஆம் தேதி திடீரென்று வீட்டிலிருந்து காணாமல் போனார். அவரை அவருடைய அக்கா தங்களுடைய உறவினர் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஜூன் 15 வரை தேடியுள்ளனர். ஆனாலும், ரம்யாவை கண்டுபிடிக்க முடியாததால் அவருடைய அக்கா சத்யா காவல் நிலையத்தில் புகார் அளிக்க திட்டமிட்டிருந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் அருகே உள்ள விவசாய நிலத்தில் நேற்று ஒரு சிறுமியின் உடல் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரித்ததில் அது சிறுமி ரம்யாவின் உடல் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து ரம்யாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக செய்யாறில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது சிறுமியின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுமியின் மரணம் குறித்த போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், தூக்கத்தில் நடக்கும் பழக்கமுள்ள சிறுமி ரம்யா ஜூன் 14 ஆம் தேதி இரவு தூக்கத்தில் நடந்து சென்றுள்ளார். அப்படி நடந்து செல்லும்போது விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications