சென்னையில் வெடித்தது மோடி கூட்டத்தில் வெடித்த அதே ரக குண்டு... விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
சென்னை: மோடி கலந்து கொண்ட பாட்னா பொதுக்கூட்டத்தில் வெடித்ததும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடித்ததும் ஒரே ரக குண்டு தான் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வியாழனன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி ரயிலில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தின் தலைநகரில் நடந்த இந்த குண்டுவெடிப்பு தமிழகத்தின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியது.

தொடர்ந்து அந்த குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இத்தாக்குதல் சம்பவம் ஆந்திரா வந்திருந்த பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடியைக் குறி வைத்து நடத்தப் பட்டதாகவும், ரயில் தாமதத்தால் சென்னையில் வெடித்ததாகவும் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் இத்தகவலை மேலும் உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற மோடி பிரச்சாரக் கூட்டத்தில் வெடித்த குண்டுகளுக்கும், சென்னையில் வெடித்த குண்டுகளுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. ஆனால், அவை எத்தகைய ஒற்றுமைகள் என்பது தெளிவாக தெரிவிக்கப் படவில்லை.
கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடித்த இரட்டை குண்டுக்கான இணைப்பு ‘குவார்ட்ஸ்' கடிகாரத்தில் அவசரக் கோலத்தில் பொருத்தப்பட்டிருந்ததால், அந்த குண்டு வெடிப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த யாசீன் பத்கல் மற்றும் அக்தர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் பெங்களூரு நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இந்திய முஜாகிதீன் அமைப்பினர் தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து தந்தவர்கள் என்பதால் விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications