கோவையில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகள்: மக்கள் அவதி
கோவை: கோவையில் ரயில்வே மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோவையில் ராமநாதபுரம்-போத்தனுர் சாலையில் நஞ்சுண்டாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2006-2007ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. மேம்பாலம் கட்ட கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு 12.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி மேம்பால கட்டுமான பணி துவங்கப்பட்டது. முதல் கட்டமாக ரயில் தண்டவாளப் பகுதியில் ரயில்வே துறை சார்பில் மேம்பாலம் கட்டப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை மூலம் ரயில் பாதையின் இருபக்கமும், மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்காக தனியார், அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
இதனையடுத்து பலரும் வீடுகளை காலி செய்தனர். இருப்பினும், மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் போத்தனூர் சாலையில் பாலம் நிறைவடையும் இடத்தில் கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த போதும் கடைசி இரண்டு கான்கிரீட் தூண்களை இணைக்கும் பணியும், பாலத்துடன் ரோட்டை இணைக்க அணுகுசாலை அமைக்கும் பணியும் மிக மந்த கதியில் நடைபெறுவதாக திமுக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும், ராமநாதபுரம் மார்க்கத்தில் பாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்தாலும் அணுகுசாலை, சர்வீஸ்ரோடு போன்றவை இன்று வரை அமைக்கவில்லை. மேம்பாலப் பணி துவங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும், பணி நிறைவு செய்யப்படாமல் உள்ளது.
நஞ்சுண்டாபுரம் பாலம் பணி நிறைவு பெறாததால் கோவை தெற்கு பகுதிக்கும், ராமநாதபுரம் வழியாகச் செல்லும் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, ரயில்வே மேம்பால பணியை அதிகாரிகளும், அரசும் விரைவுபடுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.