ஸ்மார்ட் கார்டு கட்டணம் குறைகிறது.. குறைந்து வரும் மெட்ரோ ரயில் "கிரேஸை" தூக்கி நிறுத்த திட்டம்
சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக ஸ்மார்ட் கார்டு, குறைந்த கட்டணம் ஆகிய புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. இதில் பணி முடிந்த ஆலந்தூர்-கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது.
சர்வதேச அளவில் அதிநவீன வசதிகளுடன் மெட்ரோ ரெயில் அமைந்து இருந்ததால் இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் மற்ற போக்குவரத்தை விட பயண கட்டணம் அதிகமாக இருந்ததால் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அலுவலக நாட்களில் கூட பயணிகள் கூட்டம் இல்லை.

எனவே பயணிகளை ஊக்குவிக்கவும் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கடந்த செப்டம்பர் மாதம் சுற்றுலா பயண அட்டையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒட்டுமொத்த கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் கட்டண சலுகை பெற முடியும். இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இப்போது சீசன் டிக்கெட் கட்டணத்தை அறிவித்து உள்ளது. இதற்காக பயண ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட் கார்டு 3 விதமான பயண திட்டத்தை கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. அதாவது 10 முறை, 40 முறை, 60 முறை மெட்ரோ ரயிலில் சென்று வரும் வகையில் ஸ்மார்ட் கார்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
முன்பு ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரை 10 முறை சென்று வர ரூபாய் 400 கட்டணம் செலுத்த வேண்டியது இருந்தது. ஆனால் இந்த புதிய ஸ்மார்டு கார்டு திட்டப்படி 7 நாட்களுக்கு 10 முறை சென்று வர ரூபாய் 320 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதே போல் ஆலந்தூர்- கோயம்பேடுக்கு 40 முறை சென்று வர ரூபாய் 1280 ஆம், 60 முறை சென்று வர ரூபாய் 1920 ஆம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கார்டு மூலம் மெட்ரோ ரயில் சாதாரண கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் சலுகை கிடைக்கிறது. இந்த பயண ஸ்மார்ட் கார்டை பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் 7 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஏற்றவாறு பெற்றுக்கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications