நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சியின் வரவேற்பு போர்டுகள் தீவைத்து எரிப்பு!
நெல்லை: நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சியின் வரவேற்பு பேனர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக 20க்கும் மேற்பட்டோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டையை அடுத்துள்ள கொம்மந்தானூரில் மகேஷ், மாரிமுத்து, ஸ்ரீவைகுண்டம் அருகே குமார், கால்வாயில் செல்லத்துரை உள்பட இருவர், கரந்தாநேரியில் வேல்சாமி, மாரிக்கனி, மேலப்பாளையத்தில் மாடசாமி, சங்கரலிங்கம் என தொடர்ந்து 20க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களில் நடவடிக்கை கோரி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி நெல்லையிலும், ஸ்ரீவைகுண்டத்திலும் கண்டன பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.நாங்குநேரியை அடுத்துள்ள கராந்தாநேரியில் கொலை செய்யப்பட்டவர்கள் எந்த சம்பவத்திலும் தொடர்பில்லாத அப்பாவிகள். வழக்கமாக இவ்வாறு பாதிக்கப்படுபவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறுவது அரசியல் முக்கிய பிரமுகர்கள் ,எம்.எல்.ஏ.,எம்.பி.க்கள், உள்ளிட்டோரின் வழக்கம்.
ஆனால் யாரும் இதுவரையிலும் கராந்தாநேரிபகுதிக்கு வரவில்லை. குறிப்பாக இந்த பகுதி நாங்குநேரி சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ.,எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோரும் இதுவரையிலும் வரவில்லை. இதனைத்தொடர்ந்து கராந்தாநேரியில், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமாரையும் ,நாராயணனையும் வரவேற்று பெரிய அளவில் வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர்.
அதனை நேற்று ஊர்மக்கள் கோபத்தோடு கிழித்தெறிந்து தீயிட்டு கொளுத்தினர்.மேலும் தமிழக அரசியல்வாதிகளின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போஸ்டர்களும் அங்கு ஒட்டப்பட்டுள்ளன.இதனால் இப்பகுதியில் தொடர்ந்து பரப்பரப்பு நிலவுகிறது.