முற்பகல் செய்யின்.. பிற்பகல் விளையும்... சசிகலா அண்ட்கோவுக்கு பொருத்தமான பழமொழி
ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவரை குதூகலமாக இருந்த சசிகலா, பதவி, ஆட்சி என்று வெறி பிடித்து ஆடியதன் விளைவுகளை தற்போது அனுபவித்து வருகிறார்.
ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவரை குதூகலமாக இருந்த சசிகலா, பதவி, ஆட்சி என்று வெறி பிடித்து ஆடியதன் விளைவுகளை தற்போது அனுபவித்து வருகிறார்.
சென்னை: ஜெயலலிதாவின் நிழலாக இருந்த வரை செல்வ செழிப்பாக மினி ராஜ்ஜியத்தையே நடத்தி வந்த சசிகலா, தற்போது அவராகவே மாற நினைத்து வெறியாட்டம் போட்டதன் விளைவுகளை சந்தித்து வருகிறார்.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது சசிகலா விஷயத்தில் உண்மையாகிவிட்டது.
ஜெயலலிதா அதிமுகவில் நுழைந்து கடலூரில் 1982-இல் முதல் பிரசாரம் மேற்கொண்டார். அதை வீடியோ எடுக்கும் ஒப்பந்தத்தை சசிகலா நடராஜன் பெற்றார். இதனால் ஜெயலலிதாவுடன் நிறைய நாள்களை செலவிட்டுள்ளார். இந்த உரிமையில் போயஸ் தோட்டத்துக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பை அவர் பெற்றார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல்லாக ஜெயலலிதாவின் தோழியாக இருந்தார்.
ஜெயலலிதா மறைவு
இந்நிலையில் நீர் சத்துக் குறைபாடு, காய்ச்சல் என்று அப்பல்லோவில் கடந்த 75 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கடுமையான துக்கத்தில் இருந்ததாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சசிகலா குடும்பத்தினர் அனைவரும் போயஸ் தோட்டத்துக்குள் நுழைந்தனர். அனுதினமும் தன்னை துக்கம் விசாரிக்க வந்த மக்களையும், முக்கியஸ்தர்களையும் சந்தித்து வந்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவி
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை அடைவதற்காக 25 நாட்கள் சசிகலா நடத்திய நாடகங்கள் அப்பப்பா... மறக்கவே முடியாதவை.. ஜெயலலிதா பாணியில் கட்சி தொண்டர்களை சந்திப்பது; சசிகலாதான் அதிமுகவை காக்க வந்த தேவதை போல மூத்த தலைவர்கள் இருகரம் ஏந்தி அம்மா... சின்னம்மா பதவிக்க்கு வாங்க என கெஞ்ச வைத்து ஜெயா டிவியில் திரும்ப திரும்ப ஒளிபரப்பி... என்ன குரூரத்தனம்! ஒருவழியாக நினைத்தபடி பொதுச்செயலரானார். ஆனாலும் அடங்கவில்லை ஆட்டம்.
நடை, உடை, பாவனையில் மாற்றம்
அவரது நடை, உடை, பாவனை அனைத்தும் கிட்டத்தட்ட ஜெயலலிதாபோல் மாறிவிட்டது. அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னரும் கையெழுத்தும் கிட்டத்தட்ட ஜெயலலிதா போலவே குச்சிகுச்சியாக இருந்தது. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசாததுதான் குறை. மற்றபடி எல்லாம் அவரைபோலவே இருந்தது. அவரை போல் ஆட்சி செய்ய நினைத்த நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றதால் மிகவும் மனமுடைந்தார் சசிகலா.
தினகரனின் போக்கு
தன்னை கட்சியில் இருந்து ஓரங்கட்ட தினகரன் தனித்து செயல்படும் விதம், இரட்டை இலை முடக்கம், ஆர்.கேநகர் தேர்தல் ரத்து என்று தொடர்ந்து பேரிடியாக சசிகலா தலையில் விழுந்தது. தற்போஒது சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்க எடப்பாடி அணியினர் முடிவு எடுத்திருந்தனர். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார். இதுபோல் அடுத்தடுத்து சசிகலாவின் தலையில் இடிகளாகவே விழுந்து வருகிறது.
நிழல் நிஜமானால்...
ஜெயலலிதாவுடன் கடந்த 33 ஆண்டுகளாக நிழல் போல் தொடர்ந்த சசிகலாவின் சொல்லுக்கு கட்சியினர் கட்டுப்படும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்த அவர், ஜெ. இருக்கும்போது தனி ராஜ்ஜியத்தை நடத்தி வந்தார். எத்தனை ஊழல்கள், எத்தனை முறைகேடுகள். பின்னர் ஜெயலலிதா மறைந்தவுடன் ஆட்சியையும், கட்சியையும் கபளீகரம் செய்வதற்காக அவரது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு கிட்டத்தட்ட வெறியாட்டம் ஆடினார். அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றதும் ஜெ.மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளிக்க முன்வராத சசிகலா, ஓபிஎஸ் தனக்கு எதிராக திரும்பியதால் முதல்வர் பதவி கைவிட்டு போய்விடுமோ என்ற பீதியில் நடுராத்திரியில் செய்தியாளர்களிடம் சந்தித்தபோது அவர் காட்டிய கோப பாவனைகள், கிட்டத்தட்ட சந்திரமுகி பார்ட் 2 போல் இருந்தது. போட்ட ஆட்டங்களுக்கான விளைவுகளை தற்போது அனுபவித்து வருகிறார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி சசிகலாவை பொருத்தமட்டில் சால பொருந்தும்.