தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காத அதே மேடையில் சாலமன் பாப்பையா பேசியது என்ன?
Recommended Video

சென்னை: பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா தொகுத்த தமிழ் - சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமி அரங்கத்தில் நடைபெற்றது.
அந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்பது சர்ச்சைக்குரியதாகியுள்ளது. அதே மேடையில், தமிழறிஞரும், திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் ஒருவருமான சாலமன் பாப்பையாவும் பங்கேற்ற போதிலும், அவரும் விஜயேந்திரரிடம் இதுகுறித்து எடுத்துக்கூறி விஜயேந்திரரை எழுந்திருக்க சொல்லவில்லை என்ற விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் பார்க்க முடிகிறது.

சமஸ்கிருதத்திற்கு புகழாரம்
இந்த நிலையில், சாலமன் பாப்பையா அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. சமஸ்கிருத மொழிக்கும் தமிழுக்கும் முந்தைய காலங்களில் தொடர்பு இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள சாலமன் பாப்பையா, சமஸ்கிருத மொழியை கற்க வேண்டும் எனவும் அறிவுரை கூறுகிறார்.

தொடர்ந்து உள்வாங்கிய தமிழ்
சாலமன் பாப்பையா பேசியதாவது: நல்ல விஷயங்கள் வேற்று மொழிகளில் இருந்து வருமானால், அதுவும் சமஸ்கிருதத்தில் இருந்து வருமானால் ஏற்கலாம். ஏனெனில் அதை தொடர்ந்து வாங்கிக்கொண்டிருந்த மொழி தமிழ். கம்பன் எல்லா மொழிகளையும் கற்றுக்கொண்டிருந்தாலும், சமஸ்கிருதத்தை மிக ஆழமாக கற்றுக்கொண்டவர்.

கம்பனின் ஆர்வம்
அவரது கணக்கில் அது தேவ பாஷை. வால்மீகி, வசிஷ்டர் உட்படமூவர் ராமாயணத்தை சொல்லியுள்ளார்கள். அதில் வால்மீகி சொன்ன கதையை நான் எடுத்துக்கொள்கிறேன் ஏனெனில் அவர் தெய்வ மா கவி. அந்த தெய்வ மா கவி சொல்கிற அந்த கதையை எடுத்துக்கொள்கிறேன் என்று கம்பர் கூறினார். சமஸ்கிருதத்தின் மீது அவருக்கு எவ்வளவு ஆர்வம் இருந்திருக்கும்?

படிக்க வேண்டும்
சமஸ்கிருதத்தை படிக்க இந்த மண்ணில் தடையில்லை. ஆனாலும், அதை படிப்பாரில்லாமல் போய்விட்டது. இனி படிக்க வேண்டும். படிப்பதற்கு ஆசிரியர் துணை வேண்டும். 45000 தமிழ் சொற்களுக்கு சமஸ்கிருதத்தில் உள்ள இணையான சொற்கள் கொடுத்துள்ளார் அகராதி ஆசிரியர். இது தமிழ் வளர்ச்சிக்கான பணி. இந்த முயற்சி எடுத்த அத்தனை பேருக்கும் எனது பணிவான வழக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications