ஈரோடு: தொழிலில் நஷ்டம்- தாயை கொன்று கார் புரோக்கர் தற்கொலை
ஈரோடு: ஈரோட்டில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொன்றுவிட்டு கார்புரோக்கர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் சிதம்பரனார் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 42). கார் புரோக்கர். இவருக்கு வனிதா(32) என்ற மனைவியும், கவிப்பிரியா(8), செல்வகுமார்(4) என 2 குழந்தைகளும் உள்ளனர்.
ஆறுமுகம் தனது தந்தை முத்துச்சாமி, தாய் காளியம்மாள்(70) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். தாய் காளியம்மாள் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக ஆறுமுகத்துக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. தன்னிடம் இருந்த 3 கார்களை விற்று குடும்பம் நடத்தி வந்தார்.
தொழில் அமோகமாக இருந்தபோது நண்பர்கள் பலருக்கு ஆறுமுகம் கடன் கொடுத்திருந்தார். அந்த பணத்தை அவர் திருப்பி கேட்டார். ஆனால் யாரும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லையாம்.
இதனால் வாழ்க்கையில் மிகவும் நொந்துபோன ஆறுமுகம், மீண்டும் நான் எப்படி நல்லபடியாக வாழ்வேன். இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என புலம்பி வந்தார்.
இந்த நிலையில் நேற்று வனிதா சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவு செய்தார். கணவரை அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். இதையடுத்து வனிதா குழந்தைகளை உங்கள் துணைக்கு விட்டு விட்டு செல்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் ஆறுமுகம் குழந்தைகளை வலுக்கட்டாயமாக மனைவியுடன் கோவிலுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து தனது அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதன் பின்னர் தனது வீட்டுக்கு வந்த ஆறுமுகம், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட தாய் காளியம்மாள் கட்டிலில் படுத்து கிடப்பதை கண்டார். தான் இறந்துபோனால் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மிகவும் சிரமப்படுவார் என கருதினார்.
இதையடுத்து வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டு கொண்டார். பின்னர் வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து தாயின் கழுத்தை அறுத்தார். இதில் காளியம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமானார். தாய் இறந்துவிட்டத்தை உறுதி செய்து கொண்ட ஆறுமுகம் மனைவி சேலையை எடுத்துக்கொண்டு வீட்டின் விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
கோவிலுக்கு சென்ற வனிதா மாலை 3.30 மணிக்கு குழந்தைகளுடன் வீடு திரும்பினார். வீடு உள்பக்கமாக பூட்டி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கு காளியம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், ஆறுமுகம் தூக்கில் தொங்கியதையும் கண்டு திடுக்கிட்டனர்.
இதுபற்றி அறிந்த வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.